சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்துக்கு வேட்டு!

 

 

 Urinary Tract Infections - 4 Things every woman needs to know.

 டாக்டர் கு. கணேசன்




        சிறுநீரகத்துக்கு சிக்கலை உண்டாக்கும் பாதிப்புகளில் பிரதானமானது, சிறுநீர்த் தொற்று. இது, தொட்டில் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் பாட்டனார் வரை எல்லோரையும் பாதிக்கிறது.

 உடலில் சிறுநீர் வரும் பாதையில் சிறுநீரகம், சிறுநீர் இறக்குக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் வெளியேறும் வழி என நான்கு பகுதிகள் உண்டு. அந்த இடங்களில் பாக்டீரியா தாக்கும்போது சிறுநீர்த் தொற்று (Urinary infection) ஏற்படுகிறது.

        உடலின் உள்ளிருந்து, வெளியிலிருந்து என இரண்டு வழிகளில் இது பெறப்படுகிறது. உடம்புக்குள் ‘உலா’ வரும் பாக்டீரியாக்கள் சிறுநீரகத்தைப் ‘பார்க்க’ வரும்போது அது ‘பிடித்துப்போய்’ அங்கேயே தங்கிவிடுவது முதல் வகை. அழையாத விருந்தாளி வீட்டுக்கு விசிட் செய்வதுபோல், சிறுநீர் வெளியேறும் துவாரம் வழியாக வெளியிலிருந்து பாக்டீரியாக்கள் சிறுநீர்ப் பாதைக்குள் நுழைவது இரண்டாவது வகை. இதுதான் பலருக்கும் ஏற்படும் பொதுவான வகை. ஆண்களைவிட பெண்களுக்கு இது அதிகம். எப்படி? பெண்களின் உடலமைப்பு அப்படி!

பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறும் இடத்துக்கு அருகிலேயே ஆசனவாயும் இருக்கிறது. ஆசனவாய் என்பது கழிவுகளும் கிருமிகளும் கூத்தடிக்கும் கூடாரம். பெண்கள் மலம் கழித்தபின் முன்பின்னாக கழுவ வேண்டும். பின்புறத்திலிருந்து முன்பக்கமாகக் கழுவினால், கிருமிகளுக்குக் கொண்டாட்டம் கூடிவிடும்; உடனே சிறுநீர் வெளியேறும் துவாரம் வழியாக சிறுநீர்ப் பாதைக்குள் புகுந்துவிடும். அதிலும் மாதவிலக்கு சமயங்களில் இந்தப் ‘பயணம்’ மிகச் சுலபமாக நிகழும்.

நாம் கோபத்தை அடக்கலாம். சிறுநீரை அடக்கலாமா? ரொம்ப நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தாலும் சிறுநீர்த் தொற்று ஏற்படும். என்னிடம் விலாசினி என்ற கல்லூரி மாணவி “அடிக்கடி காய்ச்சல் வருகிறது” என சிகிச்சை பெற வந்தாள். அவளுடைய காய்ச்சலுக்கு சிறுநீர்த் தொற்றுதான் காரணம் எனப் பரிசோதனையில் தெரிந்தது. விசாரித்தபோது அவள் சுயசுத்தம் காப்பதில் சமத்து என்பது புரிந்தது. அப்படியானால் அவளுக்கு அடிக்கடி இந்தப் பிரச்சனை வருவதற்கு என்ன காரணம்? அடுத்தகட்ட விசாரணையில் அவள் அம்மா ஒரு ‘குளு’ கொடுத்தார். “என் மகள் தண்ணீரே குடிக்க மாட்டாள், டாக்டர்!”.

        “ஏன்?” என்று கேட்டபோது, “தண்ணீர் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போகவேண்டும். அதைத் தவிர்க்கத்தான்” என்றாள். அவள் ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் ஒருமுறை, மாலை, இரவு என மொத்தமே மூன்று முறைதான் சிறுநீர் போவாளாம். ஏன் இப்படி?

        “எங்க காலேஜ் டாய்லெட் ரொம்பவும் நாற்றமடிக்கும். அங்கே சிறுநீர் போக மாட்டேன். அப்படியே வீட்டிலும் பழகிவிட்டது” என்றாள் விலாசினி.  இது ஒரு சோறு பதம்தான். தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் லட்சக்கணக்கான விலாசினிகள் இருக்கிறார்கள். கல்வித்துறை வகுப்பறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக் கழிப்பறைகளுக்குத் தருவதில்லை.இது இளம் வயதிலேயே சிறுநீரகப் பாதிப்புகளுக்குப் பாதை போடுகிறது என்பது கசப்பான உண்மை.

        பலரும் பேருந்து/ரயில் பயணங்களில் பல மணி நேரம்கூட ‘ரெஸ்ட்ரூம்’ போகாமல் இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய சிறுநீர் சேர்ந்துபோவதால், பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு கிடைக்கிறது. தவிர, திருமணமான புதிதில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. அதற்கு “ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்” (Honeymoon cystitis) என்று ஒரு தனிப் பெயரே உண்டு. இதற்கு என்ன காரணம்? ஹனிமூன் தம்பதியர் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது பெண்ணின் ‘ரகசிய’ப் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத சிறு கீறல்கள் ஏற்படும். இவற்றின் வழியாக பாக்டீரியாக்கள் இலகுவாக உள்ளுக்குள் புகுந்துவிடும்.

        சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரில் சர்க்கரையும் சேர்ந்தே வெளியேறும். இனிப்புள்ள இடத்தை ஈக்கள் மொய்ப்பதைப்போல, சர்க்கரை உள்ள இடத்தை நோக்கி பாக்டீரியாக்களும் காளான் கிருமிகளும் படையெடுக்கும். இதனால் சிறுநீர் வெளியேறுகிற இடத்தில் எரிச்சல், புண், அரிப்பு ஏற்படும். இப்படி அடிக்கடி சீறுநீர்த் தொற்று ஏற்பட்டால், சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது.

கருத்தரித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படும். காரணம், குழந்தை வளர வளர, கர்ப்பப்பை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. அப்போது அது அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையின் இடத்தைக் கொஞ்சம் அபகரித்துக்கொள்கிறது. குழந்தையின் தலை அம்மாவின் சிறுநீர்ப்பையை உள்நோக்கித் தள்ளுவதால், பையில் ஒரு வளைவு ஏற்படுகிறது. அந்த வளைவில் சிறுநீர் தேங்குகிறது. அங்கே பாக்டீரியா உற்பத்தியாகி தொற்றுக்கு வாய்ப்பு தருகிறது.

ஆணும், பெண்ணும் தங்கள் அந்தரங்கப் பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். கணவனும் மனைவியும் இணைந்த பிறகு பெண்ணின் சிறுநீர்ப்பைக்குள் கிருமிகள் புகுவதால், அதன் பிறகு பெண் கொஞ்சமாவது சிறுநீர் கழித்துவிட வேண்டும். அப்போதுதான் சிறுநீருடன் சேர்ந்து கிருமிகளும் வெளியேறும். தண்ணீர் விட்டு சுத்தம் செய்வது இன்னும் நல்லது. ஆனால், இப்படிச் செய்துவிட்டால் குழந்தை உண்டாகாது என்று நினைத்துப் பலரும் அப்போது சுத்தம் செய்யமாட்டார்கள். இது தவறான கருத்து.

ஆண்களுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்தில் இருக்கிற தோலை பின்னால் இழுத்து முன்னால் தள்ளலாம். (‘சுன்னத்’ செய்துவிட்டால் இது முடியாது) குளிக்கும்போது அதனுள்ளே சுத்தம் செய்யத் தவறினால், கெட்டுப்போன திரட்டுப்பால்மாதிரி அழுக்கு சேரும். அங்கே கிருமிகள் கூடிக்குலவி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர்ப்பைக்குள் புகுந்து சிறுநீர்த் தொற்றுக்கு ஏற்பாடு செய்யும்.

அடுத்து, சிறுநீர்ப் பாதையில் உருவாகும் பிறவிக்கோளாறுகளும் சிறுநீர்த் தொற்றுக்கு வழிவிடும். ஒரு கிராமத்துச் சிறுவன் “அடிக்கடி சிறுநீர் கடுப்பாகச் செல்கிறது” என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தான். இந்தப் பிரச்சனை அவனுக்கு இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறது. “உடல் சூடுதான் காரணம்” என்று முடிவுசெய்த அவன் பெற்றோர் “நிறைய தண்ணீர், இளநீர், மோர் குடித்தால் சரியாகிவிடும்” என்று வீட்டுப் பக்குவத்திலேயே நாட்களைக் கடத்திவிட்டனர். ஒரு கட்டத்தில் துப்புரவாக சிறுநீர் போகவில்லை என்றதும் என்னிடம் அழைத்துவந்தனர்.

பரிசோதித்ததில், அவனுக்கு “சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீர் வரும் பாதையில் பிறவியிலேயே சதை வளர்ந்து அடைத்துள்ளது” என்பதைக் கண்டுபிடித்தேன். உடனடியாக சர்ஜரி செய்து அந்த அடைப்பை எடுத்துவிட்ட பிறகு சிறுநீர் கழிந்தது. இதுபோல் பிறவியிலேயே நரம்பு வாதம் இருந்தால், சிறுநீர்ப் பாதை குறுகலாக இருந்தால், சிறுநீர்ப்பையில் அல்லது சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் சதை வளர்ந்து அடைத்துக்கொண்டால் சிறுநீரகத்திலிருந்து வரும் சிறுநீர் முழுவதும் வெளியேற வழியில்லாமல், சிறுநீர்ப்பையிலோ, சிறுநீர்க் குழாயிலோ தங்கிவிடும். அப்போது அங்கே கிருமிகள் வளர்ந்து தொற்றுக்கு வழி பிறக்கும்

சிலருக்குப் பரம்பரையாக ‘வியூஆர்’ (Vesicoureteric reflex-VUR) எனும் கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு சிறுநீர்க் குழாயில் (Ureter) வால்வுகள் இல்லாததுதான் அடிப்படைக் காரணம். இவர்கள் முக்கி சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாகி, அங்கிருக்கும் சிறுநீர் எதிர்திசையில் பயணித்து மீண்டும் சிறுநீரகத்துக்கே சென்றுவிடும். இதுவும் சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்தும். ‘எம்சியூ’ (MCU) எனும் ஸ்பெஷல் டெஸ்ட் இந்தப் பிரச்சனையைச் சொல்லிவிடும்

Vesicoureteral Reflux (VUR) - Urologist Singapore | Urohealth Medical Clinic 

குளிர் காய்ச்சல், விலாவில் வலி எடுத்து காய்ச்சல் வருவது, அடிவயிற்றில் வலி, சிறுநீர் போகும்போது எரிச்சல், வலி, கடுப்பு ஏற்படுவது, கஞ்சி மாதிரி சிறுநீர் வருவது, சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழிவது, அது கெட்ட வாடை வீசுவது, சிறுநீருடன் ரத்தம் வருவது போன்றவை சிறுநீர்த் தொற்றை வெளிக்காட்டும் அறிகுறிகள்.


பொதுவாகவே, சிறுநீர்த் தொற்றை அலட்சியம் செய்யக்கூடாது. பாதிப்பின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால், பிரச்சனை சிறுநீர்ப்பையோடு முடிந்துவிடும். சிறுநீரைக் கல்ச்சர் டெஸ்ட் செய்து, கிருமியின் ‘ஜாதகம் பார்த்து’ பொருத்தமான ஆன்டிபயாடிக்கைக் கொடுத்து இதை சரிசெய்துவிடலாம். “தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும், ஜூஸ் குடித்தால் குணமாகிவிடும்” என்று ‘தூங்கி’க் கொண்டிருந்தால், தொற்றானது சிறுநீரகத்துக்குப் பரவிவிடும். அதனால் சிறுநீரகமும் ‘தூங்க’ ஆரம்பித்துவிடும். அது கிட்னி ஃபெயிலியரில் வந்து முடியும். அப்போது ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், சிஸ்டோஸ்கோப்பி, ஐவிபி (IVP) என பல பரிசோதனைகள் செய்ய வேண்டியது வரும். ஊசி மருந்துகள் மட்டுமல்லாமல் ‘டயாலிசிஸ்’ சிகிச்சைகூட தேவைப்படும். நோயை வளர்த்து அவஸ்தைப்படுவானேன்? புகை வரும்போதே நெருப்பை அணைத்து, ஆரோக்கியம் காக்க ஆலோசனை பெறுவோம். என்ன ஆலோசனை?அதை அடுத்த கட்டுரையில் பேசுவோம்.

 

சிறுநீர்த் தொற்று ஏற்படாமலிருக்க என்ன வழி?

    

·          தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

·          அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

·          பகலில் 3 மணிக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும்.

·          ஒவ்வொரு முறையும் சிறுநீர் முழுவதையும் வெளியேற்றிவிட வேண்டும்.

·          இரவு படுக்கப்போகும் முன்னால் ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போது இன்னும் சிறுநீர் கழிக்க வேண்டும்போல் உணர்வு இருந்தால், 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

·          தாம்பத்திய உறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

·          சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 

வாசகர் கேள்விகள் Q & A

        

        ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்?

       - க. இந்திரா, உடுமலைப்பேட்டை.

 

       நமக்கு தினமும் சராசரியாக 3 லிட்டர் திரவம் தேவை. இதை நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவுகள் மூலம் பெற வேண்டும். அதற்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் உணவாகப் பயன்படுத்தும் சாம்பார், ரசம், மோர், காய்கறி, பழங்கள், ஜூஸ்கள் வழியாக தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைத்துவிடும். கோடையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் தேவைப்படும். கடுமையான வெயிலில் வேலை செய்பவர்களுக்கு தினமும் 5 லிட்டர் தண்ணீர் தேவை. காலையில் எழுந்ததும் 2 டம்ளர், சாப்பிட்டு முடித்ததும் 2 டம்ளர், பகலில் 3 மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு முறையும் 2 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழ ஜீஸ், இளநீர் போன்ற ஆரோக்கிய பானங்களையும் அருந்தலாம்.

 

 

முகவரி:


Dr.G.Ganesan, MBBS.,

Ganesh Hospital,

19-A, Angiah Raja Street,

RAJAPALAYAM-626 117

Mobile: 99524 34190

e-mail: gganesan95@gmail.com

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?