ஒளிந்து தாக்கும் ஒற்றைத் தலைவலி!



  

 




டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.    


‘தொற்றா நோய்கள்’ என்றதும்  ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, உடல் பருமன் என ஒரு சில நோய்கள்தான் நம்மவர்களுக்கு நினைவுக்கு வருகின்றன. நாம் சாதாரணமாக நினைக்கும் தலைவலிகூட தற்போது தொற்றா நோய்க் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது என்றால் நம்புவீர்களா? உண்மை!

முன்பெல்லாம் தலைவலிக்குக் காரணமாக உடல் நோய்களைத்தான் பெரிதாகப் பேசுவார்கள். இப்போதோ இதற்கு உளவியல் பிரச்சினைகளையும் உணவியல் மாற்றங்களையும்தான் உரக்கப் பேசுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படை இந்தியப் பண்பாட்டைச் சிதைத்து, இங்கு அனுதினமும் அரங்கேறும் அந்நிய மண்ணின் வாழ்வியல் முறைகள்தான் காரணம், வேறென்ன?


தலைவலி வகைகள்

இத்தனைக்கும் தலைவலி என்பது ஒரு தனிப்பட்ட நோயில்லை. அது ஒரு நோய் அறிவிக்கும் அலாரம் மட்டுமே! தலைவலிக்கு இருக்கிறது 300க்கும் மேற்பட்ட காரணங்கள். எனவேதான் ‘தலைவலிக்குக் காரணம் தேடும் டாக்டருக்கே தலைவலி’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

தலைவலியை முதல்நிலை, இரண்டாம் நிலை என இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கிறது மருத்துவம். முதலாவது நம் வாழ்வியலால் வளர்வது. இரண்டாவது உடல் நோய்களோடு நெருக்கம் கொண்டது.

‘மைக்ரேன்’ (Migraine) எனும் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, கொத்துத் தலைவலி போன்றவை முதல்நிலையைச் சேர்ந்தவை. 100ல் 90 பேருக்கு இந்த வகைதான் வருகிறது. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மாதிரி என்று இதைச் சொல்லலாம். இவை அடிக்கடி வந்து பயனாளியைப் பயமுறுத்துமே தவிர உயிருக்கு ஆபத்து தருவதில்லை.

சரி, படமெடுத்து ஆடும் நாகப்பாம்பைக் கையில் பற்றிக்கொண்டால் என்ன ஆகும்? எந்த நேரத்திலும் அது கொத்திவிடலாம் அல்லவா? இரண்டாம் நிலைத் தலைவலி ஏறக்குறைய அது மாதிரிதான். இதற்குக் காரணமாக ரத்தக்கொதிப்பு, சைனஸ் கோளாறு, மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி. மூளையில் ரத்தக் கசிவு எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. என்றாலும், முதல்வகையோடு ஒப்பிடும்போது இரண்டாம் வகையால் பாதிக்கப்படுகிறவர்கள் குறைவுதான்.

உலகத்தில் பாதிப்பேருக்கு வருடத்தில் ஒருமுறையாவது தலைவலி வந்து படுத்தியிருக்கும். அவ்வளவு பரவலான தலைவலியை, ஒரு மாத்திரை போட்டுச் சமாளித்துவிடலாம் என்று மிகச் சாதாரணமாகக் கடந்துபோகவும் கூடாது. அதேநேரம், ‘பத்து நாளா தலைவலி விட்டபாடில்லை! நரம்பு பிரச்சினையாக இருக்குமோ, பிரெய்ன் டியூமரா இருக்குமோ எனப் பயந்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தே ஆக வேண்டும்’ என்று அடம் பிடித்து வீட்டை இரண்டாக்கி விடவும் கூடாது. அடிக்கடி தலைவலி வந்தால், குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதுதான் சரியான தீர்வு.

ஒற்றைத் தலைவலி

எல்லாத் தலைவலி பற்றியும் சொல்ல வேண்டுமானால், ‘காமதேனு’ தனி இணைப்பைத்தான் தர வேண்டும். எனவே, தலைவலிகளின் தலைவனாகத் திகழும் ஒற்றைத் தலைவலியை மட்டும் இப்போது பார்ப்போம்.

முன்பு ஒற்றைத் தலைவலி என்பது வம்சாவளியில் வருகிறது என்று சொன்னார்கள்.  அப்பா, அம்மாவுக்கு இது இருந்தால் வாரிசுகளுக்கும் வரக்கூடும் என்று பாடம் நடத்தினார்கள்.  இப்போது அந்தப் ‘பாடத்திட்டம்’ மாறிவிட்டது. ஒற்றைத் தலைவலிக்கு நம் வாழ்வியல் மாற்றங்கள்தான் பிரதானம் என்கிறார்கள்.

ஒற்றைத் தலைவலி பொதுவாக 4 கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் தலைவலி வருவதற்கு முன்பு, லேசாகத் தூக்கம் வருவதுபோல் இருக்கும். காரணம் இல்லாமல் எரிச்சலும் கோபமும் வரும். வயிற்றைப் புரட்டும்; குமட்டும்.

இரண்டாம் கட்டத்துக்கு ‘ஆரா’ (Aura) என்று பெயர். இதில் கண்களுக்கு முன்னே ஒளி வட்டம் தோன்றும். காட்சிகள் அலை அலையாகத் தெரியும். சிலருக்கு முகம், கை, கால்களில் மதமதப்பு ஏற்படும். காதில் வித்தியாசமான ஒலி கேட்கும்.

மூன்றாம் கட்டத்தில்தான் தலைவலியே தோன்றும். அதுவும் எப்படி? தலையின் ஒரு பக்கத்தில் சம்மட்டியால் அடிப்பதுபோல் அத்தனை கடுமையான வலி. சிலருக்குத் தலையின் இரண்டு பக்கமும் வலிக்கக் கூடும். வாந்தி வரும்.

இறுதிக் கட்டத்தில் தலைவலி குறைந்து, கழுத்து மட்டும் பாரமாக இருக்கும். உடல் சோர்வாக இருக்கும். எதையும் யோசிக்கத் தோன்றாது. ஓய்வெடுத்தால் போதும் என்ற நிலையில்தான் இருப்பார்கள். இது ஒற்றைத் தலைவலியின் பொதுவான முகம்.

ஆனால், இது அச்சடித்த நோட்டீஸ்போல் எல்லோருக்கும் ஒரே மாதிரி தோன்றும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து சில அறிகுறிகள் ஒளிந்துகொள்ளும். பல சமயங்களில் அது ஒற்றைத் தலைவலியா, கொத்துத் தலைவலியா எனச் சந்தேகம் வந்து, மருத்துவர்களுக்கே நோயைக் கணிக்கச் சிரமப்படுத்தும்.



உதாரணத்துக்கு இந்தச் சம்பவம்….


என்னிடம் சிகிச்சைக்கு வந்த அங்கிதாவுக்கு 26 வயது இருக்கும். அவர் கடந்த மூன்று வருடங்களாக அடிக்கடி வாந்தி வந்து கஷ்டப்பட்டார். ஆரம்பத்தில் ‘இது பித்த வாந்தியாக இருக்கும்’ எனக் கருதிச் சுயசிகிச்சை செய்துகொண்டார். வாந்தி நிற்கவில்லை. பிறகு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது, இரைப்பையில் அல்சராக இருக்கலாம் எனக் கருதி மாத்திரை, மருந்துகள் கொடுத்தனர். அவற்றிலும் வாந்தி விட்டபாடில்லை. எனவே, எண்டோஸ்கோப்பி எடுத்துப் பார்த்திருக்கிறார். அதன் ரிசல்ட் ‘நார்மல்’ என்று வந்ததால், அல்சர் சிகிச்சையை நிறுத்திவிட்டு, கண் மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அவருக்கு வாந்தி வருவதற்கு முன்னால் பார்வையில் பூச்சி பறப்பதுபோல் இருந்ததால், இந்த யோசனை வந்தது.

‘கண்ணில் எந்தக் குறையும் இல்லை’ என்று சொன்ன கண் மருத்துவர், ‘எதற்கும் மூளை நரம்பு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது’ என்று கைகாட்ட, அங்கும் சென்றிருக்கிறார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்த நரம்பியல் மருத்துவர், ‘உங்களுக்கு மூளையில் பிரச்சினை இல்லை. மாறாக, மனம் சார்ந்ததாக இருக்கலாம். அதனால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்’ என அனுப்பிவிட்டார். அங்கும் சில மாதங்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார். எந்தப் பலனும் இல்லை. கடைசியில் என்னிடம் வந்தார்.

அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, அவருடைய மருத்துவத் தரவுகள் அனைத்தையும் பொறுமையாகப் புரட்டிப் பார்த்தேன். உடலில் நோய் எதுவும் இல்லை. அவருடைய பிரச்சினை ஒற்றைத் தலைவலியாக இருக்கும் எனச் சந்தேகப்பட்டேன். அதற்கான சிகிச்சையை ஆரம்பித்தேன். விரைவிலேயே வாந்தி நின்று விட்டது.  மூன்றாண்டு அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைத்தது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நம் வாழ்க்கைமுறைகள் நவீனமடையும்போது, வழக்கமான நோய்கள்கூட புதிய அவதாரங்கள் எடுக்கின்றன. இந்தச் சூழலை வளரவிடுவது நல்லதில்லை. இது மருத்துவர்களுக்கு நோய்களைச் சரியாகக் கணிப்பதற்குச் சவால் விடுகிறது.

பாருங்களேன், என்னிடம் சிகிச்சை பெற்ற அங்கிதாவுக்கு ஒற்றைத் தலைவலிக்கான முக்கிய அறிகுறிகள் எதுவுமில்லை. அவருக்கு வாந்திதான் பிரதானத் தொல்லை. தலைவலியே இல்லை. அதனால், அவருக்கு நோயைக் கணிப்பது கடினமாகிவிட்டது.

இப்படி, இனி எல்லா நோய்களும் தங்கள் முகங்களை மாற்றிக்கொண்டால், மருத்துவர்களின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். மக்களின் பாடு அதைவிட மோசமாகிவிடும். ஆகவேதான், ‘நம் பாரம்பரியத்தை விட்டு விலகாதீர்கள்!’ என்று வலியுறுத்துகிறோம்.

அதுசரி, ஒற்றைத் தலைவலிக்கும் நம் பாரம்பரியம் மறந்த வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.




பெட்டிச்செய்தி - 1

    மைக்ரேன் டேட்டா!


·      உலக அளவில் 100ல் 15 பேருக்கு ஒற்றைத் தலைவலி இருக்கிறது.

·      இந்தியாவில் 100ல் 25 பேருக்கு இது இருக்கிறது.

·      ஆண்களைவிட பெண்களுக்கு 3 மடங்கு இது அதிகம்.

·      இது பதின்பருவத்தில் தொடங்குகிறது.

·      30லிருந்து 35 வயது வரை இது அதிகம் பாதிக்கிறது.

·      சராசரியாக வருடத்தில் 25 நாட்களுக்குத் தொல்லை தருகிறது.

 

பெட்டிச்செய்தி  - 2

டென்ஷன் தலைவலி!


·      திடீரென தலை முழுவதும் வலிக்கும்.

·      ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இருக்கும்.

·      தலையைச் சுற்றி கயிறு கட்டி அழுத்துவது போலிருக்கும்.

·      வாந்தி இருக்காது.

·      பார்வையில் மாறுதல்கள் காணப்படாது.

·      காலையில் வலி குறைவாக இருக்கும்.

·      மாலையில் வலி கடுமையாகும்.



16.07.2018 காமதேனு இதழ்.

முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,                Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                   Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

 

 

 

 

 

Comments

  1. தரைவலிகளின் தலைவன்.... செம சார்...

    ReplyDelete
  2. Superb sir.
    My daughter too suffering by headache.
    I worried a lot.
    Your article cleared my worries .
    Thank you sir

    ReplyDelete
  3. தலைவலி என்பது ஒரு தனிப்பட்ட நோயில்லை. அது ஒரு நோய் அறிவிக்கும் அலாரம் மட்டுமே என்று கோடிட்டுக் காட்டி பின்பு தலைவலிக்கு 300க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.எனவேதான் ‘தலைவலிக்குக் காரணம் தேடும் டாக்டருக்கே தலைவலி’ என்று கூறி தலைவலியை சரியாகக் கணிப்பதற்குச் சவால் விடுகிறது
    மேலும் நவீன வாழ்வியலில்
    எல்லா நோய்களும் தங்கள் முகங்களை மாற்றிக்கொண்ட தால் தான் எனக்கூறி  முடிவில்
    ஒற்றைத் தலைவலிக்கும் நம் பாரம்பரியம் மறந்த வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்புடன் கட்டுரையை முடித்து உள்ளீர்கள்.

    ஆவலுடன் அடுத்த கட்டுரையை எதிர்நோக்கு கிறோம்.
    S. K. Subramanian.
    Chennai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?