சைனஸ் தலைவலி இனி இல்லை!

Sinusitis: Infection, Symptoms, and Treatment



 

 

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும் மண்ணில் காளான்கள் முளைப்பதுபோல் ஜலதோஷம், சளி, காய்ச்சல், இளைப்பு, ஆஸ்துமா என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டத் தொடங்கிவிடும். அதிலும் மூக்குச் சளியை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடும்.

எது ‘சைனஸ்’?
    
மூக்கைச் சுற்றி வலது புறம் 4, இடது புறம் 4 என மொத்தம் 8 காற்றுப் பைகள் இருக்கின்றன. இந்தப் பைக்குப் பெயர்தான் ‘சைனஸ்’ (Para Nasal Sinus). மூக்குக்கு உறுதுணையாக இருக்கும் இந்தப் பைகளின் பயன் என்னவென்றால் நாம் பேசும்போது சரியான ஒலிவடிவம் தருவது; முக எலும்பின் எடையைக் குறைப்பது.


https://www.verywellhealth.com/thmb/h3YUe5NK00Cj9aXCEm0dcNUclo8=/1000x1000/smart/filters:no_upscale()/sinusitis-causes1-5ae0c653875db90037df21b6.png


சைனஸ் பிரச்சினை ஏன்?

சைனஸ் பைகள் உடலில் ஏர் கண்டிஷனர்போல் வேலை செய்கின்றன; அதாவது,  நாம் சுவாசிக்கும் காற்றைத் தேவையான வெப்பத்தில் குளிரச்செய்து நுரையீரலுக்குள் அனுப்புகின்றன. சாதாரணமாகவே சைனஸ் பைகளில் சிறிதளவு திரவம் எப்போதும் சுரக்கும். அது சைனஸ் கதவுகள் வழியாக மூக்குக்கு வரும். மூக்கில் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் அதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த ஈரம் மூக்குக்குத் தேவைப்படுகிறது. சூறைக்காற்றும் சுகம் தரும் தென்றலாக மாறுவதுபோல் வெளிக்காற்று அனலாக நுழைந்தாலும், இந்த ஈரம் அதைக் குளிரச் செய்துவிடுகிறது. இதனால் நுரையீரலுக்குள் இதமான வெப்பத்துடன் காற்று நுழைகிறது. வெப்பக்காற்று அப்படியே நுழைந்தால் நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால் இயற்கையாக உருவான தடுப்பு ஏற்பாடு இது. 


சாலை விபத்துகளைத் தவிர்க்க சில விதிகள் இருப்பதுபோல் சைனஸ் பிரச்சினை வராமல் இருப்பதற்கும் விதிகள் உண்டு. சைனஸ் பைகளில் காற்றுதான் அதிகம் இருக்க வேண்டும்; திரவம் சிறிதளவு இருக்க வேண்டும். மூக்கிலுள்ள சைனஸ் கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும்; எந்தக் காரணத்தைக் கொண்டும் அடைத்துக்கொள்ளக்கூடாது. இந்த விதிகள் மீறப்படும்போது சைனஸ் பிரச்சினை செய்யும். முக்கியமாக, சைனஸ் தலைவலி (Sinusitis) மண்டையைப் பிளக்கும்.

ஜலதோஷத்தின் அவதாரம்!


பெரும்பாலும் ஜலதோஷத்தின் அடுத்த அவதாரம்தான் சைனஸ் பிரச்சினை. ஜலதோஷத்தினால் உருவாகும் சளியானது சைனஸ் பைகளில் தங்குவது வழக்கம். ஆனால், அது தீபாவளிக்கு வந்த விருந்தாளிபோல் சில நாட்களில் வெளியேறிவிடும். அப்படியில்லாமல் உள்ளே போன சளி பிரசவத்துக்கு வந்த பெண்போல் அதிக நாட்களுக்குத் தங்கிவிட்டால், சைனஸ் பிரச்சினை தொடங்கிவிடும். கிருமிகள் கலந்த சளி அங்கு தொடர்ந்து இருக்கும்போது சீழாக மாறித் தொல்லை கொடுக்கும்.

பலருக்கும் மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற தடுப்புச் சுவர் (Septum) நேராக இல்லாமல் சற்றே வளைந்திருக்கும். அப்போது மூக்கில் லேசாகச் சளி பிடித்தாலும், அந்த வளைவு அருகிலிருக்கும் சைனஸ் வாசல்களை அடைத்துவிடும். இதுபோல், அந்த வாசல்களில் ஏற்படுகிற சதை வளர்ச்சியும் (Polyp) இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும்.
 
எதிராளிகள் யார்?

பொதுவாக, சூழல் மாசும் ஒவ்வாமையும்தான் சைனஸ் பிரச்சினையை உண்டுபண்ணும் எதிராளிகள். இன்றைய வாழ்க்கைச் சூழலில் மாசடைந்த காற்றுக்குப் பஞ்சமில்லை. புகை கக்கும் வாகனங்கள் பெருகப் பெருக காற்றில் மாசு எல்லை மீறுகிறது. அந்தக் காற்றைச் சுவாசிக்கும் நமக்கு சைனஸ் தொல்லை தருகிறது. தூசு நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தாலும் இதே பிரச்சினைதான். எப்படி? அசுத்தக் காற்றில் வரும் கிருமிகள்/ரசாயனங்கள் மூக்குச் சவ்வுகளைத் தாக்கும்போது சவ்வு வீங்கி சைனஸ் வாசல்களை அடைக்கும். சொத்தைப் பல்கூட சைனஸ் தொல்லைக்குக் காரணமாகும். குழந்தைகளுக்கு அடினாய்டு சதை வளர்வது இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு காரணம்.

இந்த மழைக்காலத்திலும் ஜஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குளிர்பானங்களைக் குடிப்பவர்களும் உண்டு. சீசனில் குற்றாலக் குளிரைத் தாங்குபவர்கள் ஊட்டி குளிரைத் தாங்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. அதுபோல் இதமான குளிர்ச்சியைத்தான் சைனஸ் விரும்பும். அதிகக் குளிர்ச்சி அதற்கு ஆகாது. அதனால்தான் அதிகக் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், அதைத் தாங்க முடியாமல் சைனஸ் வாசல்கள் சுருங்கிவிடுகின்றன. அதுபோல் பனியில் நடந்தால், மழையில் நனைந்தால் சைனஸ் தொல்லைக்குப் பரிசுக் கேடயம் கிடைத்த மாதிரி சந்தோஷம் பொங்கிவிடும். நமக்கோ கடைசிப் பந்தில் கோப்பையைக் கைவிட்ட வீரர்களைப்போல் முகத்தில் சோகம் அப்பிவிடும்.

இன்னொரு புறம், மூக்கடைப்புக்குச் சரியான தீர்வு காணாமல், எந்நேரமும் கைக்குட்டையும் கையுமாக மூக்கை உறிஞ்சுவதும் சிந்துவதுமாக சிலர் இருப்பார்கள். இதனால் சைனஸ் பைகளில் அழுத்தம் அதிகரித்து நிலைமை இன்னும் மோசமாகும். எரியும் ஹோமத்தில் நெய்விட்டால் என்ன ஆகும்? அதுமாதிரிதான் அப்போது சைனஸ் நிலைமையும். இப்படிப் பல வழிகளில் சைனஸ் அறைகள் அடைபட்டுக்கொள்ளும்போது தொந்தரவுகள் ஆரம்பித்துவிடும்.

Your Sinus Headache Could Actually Be a Migraine Headache - BergerHenry ENT  Specialty Group

அவை என்ன தொந்தரவுகள்?


தலை பாரமாக இருக்கும். குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இது ஒரு நச்சுவலியாக இருந்துகொண்டே இருக்கும் என்பதால் அன்றாடப் பணிகளை உற்சாகத்துடன் செய்ய முடியாது; நுணுக்கமான பணிகளில் கவனம் செலுத்தமுடியாது. மேலும் மூக்கு ஒழுகும்/மூக்கு எந்நேரமும் அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். இதனால் சுவாசிப்பது சிரமப்படும். இந்தப் பாதிப்புகள் நீடித்தால், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் மூக்குச் சளி கட்டியாக வெளியேறும். சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது; ருசியை உணர முடியாது. காய்ச்சல் வரலாம். மூக்கால் பேசுவதுபோலிருக்கும்.

சைனஸ் பிரச்சினையைக் கவனிக்காமல் விட்டால் சமயங்களில் அது விபரீதமாகிவிடும். இதைச் சொல்லும்போது “சைனஸ்தானே… என்ன பண்ணிடும்னு அலட்சியமாக இருந்தேன், டாக்டர். கடைசியில் எனக்குப் பார்வை சிக்கலாயிடுச்சு!” என்று வருத்தப்பட்ட நோயாளி நாராயணசாமிதான் என் ஞாபகத்துக்கு வருகிறார். அவருக்கு சைனஸில் பிடித்த சீழ் கண்களுக்குப் பரவி, தசைகளின் இயக்கம் கெட்டு, இரட்டைப் பார்வை ஆகிவிட்டது.

அடுத்து, நெற்றியிலுள்ள சைனஸில் சீழ் பிடித்துவிட்டால் மூளைக்காய்ச்சல் கூட வரலாம் என்கிறார்கள் காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள். இப்படிச் சொல்லிவிட்டதால் பயப்பட வேண்டாம். மிக அரிதாக நிகழும் இந்தக் கொடிய விபரீதங்களில் நீங்கள் சிக்கிக்கொள்ளக் கூடாதல்லவா? அதனால் சொன்னேன்.

பரிசோதனைகள் என்னென்ன?

சைனஸ் பிரச்சினையைக் கண்டறிய வழக்கமான ரத்தப் பரிசோதனைகளும் ஒவ்வாமைப் பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றோடு முகத்தை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது பழைய முறை. இப்போது நேரடியாக சி.டி.ஸ்கேன்/எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார்கள். இதைவிட உசத்தி, மூக்கு எண்டோஸ்கோப்பி (Nasal endoscopy) பரிசோதனை. இது சைனஸ் பாதிப்பை மிகத் துல்லியமாகக் கணிக்கிறது. உள்ளே தேங்கியிருப்பது சளியா, சீழா என்பது தெரிந்துவிடுகிறது. அதற்கேற்ப சிகிச்சையைத் தீர்மானிக்க முடிகிறது.

என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?
    
சைனஸ் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையைத்தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். ஆனால் இதையே தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பதுபோலிருக்கும். ஆனால், நாளடைவில் அந்த நிவாரணம் நின்றுவிடும். வேறென்ன, பழகப் பழகப் பாலும் புளிக்கிற கதைதான். இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயரைப் பயன்படுத்தலாம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்திக் காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கிலும் சைனஸிலும் உள்ள சளி இளகி சுலபத்தில் வெளியேறிவிடும். சளிக் கிருமிகளுக்குத் தகுந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைச் சாப்பிட வேண்டும். தேவையானபோது வலி மாத்திரைகளைச் சாப்பிடலாம். ஒவ்வாமைப் பொருளைத் தவிர்ப்பதும் ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமான தடுப்பு அரண்கள். தூசு/புகை ஆகாதவர்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது. தினமும் பிராணாயாமம் செய்வதும் பலன் தரும். இவற்றில் எல்லாம் பிரச்சினை தீரவில்லை என்றால் அடுத்த ஆயுதம் அறுவை சிகிச்சைதான்.

எண்டோஸ்கோப்பி உதவும்!

முன்பெல்லாம் சைனஸ் சளியை/சீழை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். இந்த நிலைமை இப்போது இல்லை. எண்டோஸ்கோப்பி கருவிகொண்டு, ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன அறுவை சிகிச்சையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாக சிகிச்சை கொடுத்து குணப்படுத்த முடிகிறது. மூக்கில் ஏற்படும் சதை வளர்ச்சி, தடுப்புச்சுவர் வளைவு போன்றவற்றையும் இந்தக் கருவி மூலம் சரிசெய்ய முடிகிறது. எனவே, குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. இன்றைய நவீன மருத்துவத்தில் ஆடி அடங்கிவிடும் சைனஸ் தொல்லை.


பெட்டிச் செய்தி:               

வேண்டாமே!

·    ஐஸ், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பதார்த்தங்கள் வேண்டாம்.
·    குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது.
·    பனியில் அலையக் கூடாது.
·    புகைபிடிக்கக் கூடாது.
·    புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.
·    மூக்குப்பொடி போடக் கூடாது.
·    அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.
·    மூக்கைப் பலமாக சிந்தக் கூடாது.
·    விரல்களால் மூக்கைக் குடையக் கூடாது.
·    மூக்கு இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
·    ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவக்கூடாது.


கட்டுரையாளர்: டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

முகவரி:


·    Dr. G. Ganesan, MBBS.,                      Ganesh Hospital,
·    53/19-A, Angiah Raja Street,               RAJAPALAYAM-626 117
·    VIRUDHUNAGAR – DT                    Mobile: 99524 34190       
·    e-mail: gganesan95@gmail.com

















Comments

  1. S. K. Subramanian

    சைனஸ் என்றால் என்ன, அது எங்கு உள்ளது, அதனுடைய பயன் என்ன அது பாதிக்கப்படும் போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் என்ன என்பதை நகைச்சுவை உணர்வுடன் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இக்கட்டுரை சிறப்புற அமைந்துள்ளது.

    உதாரணமாக
    சளியானது சைனஸ் பைகளில் தங்குவது வழக்கம். ஆனால், அது தீபாவளிக்கு வந்த விருந்தாளிபோல் சில நாட்களில் வெளியேறிவிடும். அப்படியில்லாமல் உள்ளே போன சளி பிரசவத்துக்கு வந்த பெண்போல் அதிக நாட்களுக்குத் தங்கிவிட்டால், சைனஸ் பிரச்சினை தொடங்கிவிடும் என நகைச்சுவையாக இப்பதிவின் மூலம் சளியை உடனடியாக குணப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

    எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டுரை எழுதுவதில் டாக்டர் (திரு) கு. கணேசன் அவர்களுக்கு நிகர் அவரேதான்

    ReplyDelete
  2. அருமை அற்புதம்,தொடரட்டும் தங்கள் சேவை..TNR.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்
    சார். சைனஸ் அவதியிலிருந்து விடுபட எதிராளிகளிடமிருந்து முன்னெச்சரிக்கை தேவை என்ற அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?