தசைநார் வலி – இது பெண்களுக்கான வலி!

 

 

 


                           தசைநார் வலி – இது பெண்களுக்கான வலி!  


                               டாக்டர் கு. கணேசன்,   இராஜபாளையம்.

 
லி இல்லாத வாழ்வு நமக்கேது? தலைவலி, பல்வலி, கைகால்வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு வலியைக் கடந்துதான் வந்திருப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம் கண்டுபிடித்து சிகிச்சையும் பெற்றிருப்போம். ஆனால், இன்ன காரணம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத அளவுக்கு வலி வந்து வாட்டினால், அது ‘தசைநார் வலி’ (Fibromyalgia). முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த வலி இப்போது இளம் பருவத்திலேயே ஏற்படுகிறது என்பதுதான் கவலை தரும் விஷயம். அதிலும் இது குடும்பத்தில் பிரச்சினை உள்ள பெண்களுக்கு - மன அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு - அதிகம் தொல்லை தரும். அதனால்தான் இது பெண்களுக்கான வலி என்று சொன்னேன்.

எது தசைநார் வலி?

தீராத தசைவலியைத் ‘தசைநார் வலி’ என்கிறோம். இது ஆண்களைவிடப் பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 20லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களே இதன் இலக்கு. முதுகுவலி, இடுப்பு வலி, தலைவலி எனக் குறிப்பிட்ட வலி என்றில்லாமல் உடலில் பல இடங்களில் பரவலாக உணரக்கூடிய வலியாக இது இருக்கும். கைகால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் தனித்தன்மை. உதாரணமாக, இடக் கை வலித்தால் அதே வேளையில் வலது கையும் வலிக்கும்; வீட்டிலோ, அலுவலகத்திலோ, அன்றாடப் பணிகளை உற்சாகமாகச் செய்யவிடாது; மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும். உறக்கமின்மையும் ஞாபக மறதியும் சேர்ந்துகொள்ளும். இளம் பருவத்தினரின் இயல்பான குதூகலம் மறைந்துபோகும்.

என்ன காரணத்தால் இது வருகிறது?


இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சமயங்களில் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்வதும் உண்டு. ஹார்மோன்களின் சமச்சீர் நிலைமை சீர்குலைவது இந்த நோய் வர முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. பொதுவாக, உடலில் வலி ஏற்படும்போது ‘செரோட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நமக்கு வேதனை தெரியாத அளவுக்கு வலியைக் கட்டுப்படுத்த இது முயலும். பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும்போதும் முழுவதுமே சுரக்காதபோதும் தசைநார் வலி ஏற்படும்.


அடுத்து, வலியை உணரச் செய்யும் ‘சப்ஸ்டன்ஸ்-பி’ எனும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தில் அதிகரிக்கும்போது தசைநார் வலி தோன்றும். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் நீண்ட காலம் மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். மேலும், குடும்பத்தில் திடீரென ஏற்படும் சோக நிகழ்வுகள், இழப்புகள், விபத்துகள், அதிர்ச்சியான செய்திகள் போன்றவை இந்த வலியைத் தூண்டுகின்றன.



தசைநார் வலி உடலில் எங்கெல்லாம் வரும்?


தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை, நடு நெஞ்சின் மேற்பகுதி, முழங்கை, இடுப்பு உட்காரும் இடம்,  முழங்காலின் பின்பகுதி. இந்த இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு, தசை இறுக்கம் இருப்பதையும் உணரமுடியும். அந்த இடங்களை அழுத்தினால் வலி அதிகரிக்கும். இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். குறிப்பாக, காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும் இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் ஆற்றல் இல்லாததுபோல் இருக்கும். உடலில் தசைவலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது தசைநார் வலியாகத்தான் இருக்கும்.

என்ன பரிசோதனை உள்ளது? சிகிச்சை உண்டா?


இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரையும் அவரது ஆலோசனைப்படி நரம்புநல நிபுணர், மனநல நிபுணர், எலும்புநல நிபுணர் ஆகியோரையும் ஆலோசிக்க வேண்டும். இந்த நோயைக் கண்டறிய எந்தப் பரிசோதனையும் இல்லை.  ரத்தப்பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவை உடலில் வேறு பாதிப்புகளால் இந்த வலி ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவே உதவும். ‘வலிப்புள்ளி ஆய்வு’ ஓரளவுக்கு உதவும்.

இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றிலும் ஆலோசனை பெறலாம். ஆனால், வலியைக் குறைக்கும் சிகிச்சைகள் மட்டும் இதற்குப் பலன் தராது. மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் சிந்தனை சார்ந்த பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் (CBT)  தேவைப்படும். இவற்றோடு தசைஊட்டப் பயிற்சிகள், தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்சர் சிகிச்சையும் ஆயுர்வேத மசாஜ் செய்வதும் நல்லது. இப்படியான கூட்டு சிகிச்சைதான் இதற்குக் கைகொடுக்கும். வலி அதிகமுள்ள இடங்களில் ஸ்டீராய்டு ஊசிகளைச் செலுத்தினால் வலி குறைவதும் உண்டு. இதற்கு அனுபவம் உள்ள மருத்துவரிடம் செல்ல வேண்டும். கால்சியம், மல்டி வைட்டமின் மற்றும் வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்ற நரம்பூட்ட ஊசிகள், மாத்திரை, மருந்துகளும் உதவும். 

இதைத் தடுக்க முடியுமா?


முடியும். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை முதல் முக்கியம். சரியான உறக்கமும் முக்கியம். இரவில் தொலைக்காட்சி, மொபைல் போன், கேட்ஜெட்ஸ் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். காலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இரவில் இளம் வெந்நீரில் குளிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மதுவும் புகையும் ஆகவே ஆகாது. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவுகள், காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிட்டு உடலின் பொது ஆரோக்கியத்தைக் காத்துக்கொண்டால், செரோட்டோனின் சுரப்பு சீராக இருக்கும். ஓய்வு நேரங்களில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யுங்கள். இயன்ற அளவுக்குச் சேவைப்பணிகளில் ஈடுபட்டு சமூகத்துடன் கலந்து பழகுங்கள். இப்படி ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழப் பழகினால், தசைநார் வலிக்கு உடலில் இடமில்லாமல் போகும்.


டாக்டர் கு. கணேசன், MBBS.


நான்
யார்?

பொதுநல மருத்துவன். மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்கணேஷ் மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

எழுத்துப் பணி: மருத்துவ அறிவியல் எழுத்தாளர். இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன். தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், குமுதம், குங்குமம், கல்கி, ஹெல்த் & பியூட்டி, டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், குமுதம் ஹெல்த், கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்பு. தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

விருதுகள்: மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதானதேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்தமிழ்ப்பேராய விருது’, சென்னை, முத்து பார்மஸியின்சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின்தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன். ‘பாரதிப் பணிச் செல்வர்’, ‘மருத்துவ இலக்கிய மாமணி’ எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

குடும்பம்: மனைவி திருமதி லலிதா கணேசன். மகன் டாக்டர் . திவாகர், MBBS., DNB.,  தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் (Intensivist), (ஜெம் மருத்துவமனை, கோவை). மருமகள் டாக்டர் பௌசியா, MD., குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். பேத்தி தியா. மகள் டாக்டர் . ஆர்த்தி, MBBS.,

முகவரி:

·         Dr. G. Ganesan, MBBS.,             Ganesh Hospital,

·         53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

·         VIRUDHUNAGAR – DT            Mobile: 99524 34190      

·         e-mail: gganesan95@gmail.com

·         வலைதளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 


Comments

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?