சூலகம் சுகமா? (PCOD பிரச்சினை)

 

 


 

                   சூலகம் சுகமா?  (PCOD பிரச்சினை) 

                                 


                                         டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 ஹானா ஒரு பன்னாட்டு மோட்டார் நிறுவனத்தில் மென்பொருள் ஆய்வாளர். இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்மையில் அவர் முகத்தில் பருக்கள் முளைத்து அசிங்கப்படுத்தின. வீட்டுச் சிகிச்சைகள் செய்து பார்த்தார். பலனில்லை. விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அம்மாவுடன் என்னைச் சந்திக்க வந்தார்.


        சஹானா பருமனாக இருந்தார். முகத்தில் மெல்லியதாக மீசை முளைத்திருந்தது. கைகளில் முடிகள் தெரிந்தன. “மாதச் சுழற்சி சரியாக வருகிறதா?” எனக் கேட்டேன். “இல்லை, டாக்டர்! சில மாதங்களாக இரண்டு, மூன்று மாதங்கள்கூடத் தள்ளிப்போகிறது. அப்படியே ஆனாலும் அதிகமாகப் போகிறது” என்றார். எனக்கு அவருடைய பிரச்சினை புரிந்துவிட்டது.

        அவர் அம்மாவிடம், ‘உங்கள் மகளுக்கு வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது நல்லது” என்றேன். “முகப்பருவுக்குத்தானே சிகிச்சை பெற வந்தோம். அதற்கு எதற்கு ஸ்கேன்?” என்ற குழப்பத்துடன் அவர்கள் என்னைப் பார்த்தனர்; “காரணம் இருக்கிறது” என்றதும், அருகிலிருந்த ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து வந்தனர். அதில் சஹானாவுக்கு ‘பி.சி.ஓ.டி.’ (PCOD) எனும் நீர்க்கட்டிகள் இருப்பது உறுதியானது.

‘கட்டி’ என்றதும் அந்த அம்மா பயந்துவிட்டார். ‘என்ன சொல்றீங்க, டாக்டர்?’ என்று பதற்றத்துடன் கேட்டார். “பயப்பட ஒன்றுமில்லை! பெண்களுக்கு ஏற்படும் கட்டிகளில் ஆபத்து இல்லாத கட்டி இது. ‘ஓவரி’ என்று சொல்லப்படுகிற சூலகத்தில் இது உண்டாகிறது. இதற்கு நவீன சிகிச்சைகள் நிறையவே இருக்கின்றன. அவற்றைப் பெறுவதற்கு ஒரு மகளிர்நல மருத்துவரைச் சந்திப்பது நல்லது” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்புவரை பரம்பரை காரணமாக எங்கோ, எவருக்கோ ஏற்படும் ‘பி.சி.ஓ.டி.’ பிரச்சினை, தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களால், ‘இது யாருக்குத்தான் இல்லை?’ என்று கேட்கும் நிலைமைக்கு மோசமாகிவிட்டது. புள்ளிவிவரப்படி சொன்னால், திருமண வயதில் உள்ள பெண்களில் 20% பேருக்கு இது இருக்கிறது. திருமணமான பெண்களுக்குக் குழந்தை ‘தங்காமல்’ போவதற்கு இதுதான் முக்கியக் காரணமாவும் இருக்கிறது.



நீர்க்கட்டியின் ஊற்றுக்கண்!

இன்றைக்குப் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து விட்டது. படிக்கும் காலத்தில் தொடங்கும் இந்தப் பழக்கம் வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. படிக்கும் காலத்திலாவது நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது எனப் பழக்கம் இருக்கும். வேலைக்குச் சென்றதும், அந்தப் பழக்கமும் மறைந்துவிடும். உடற்பயிற்சிக்கு நேரமே இருக்காது. அடுத்து, அவர்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்யும்போது, உடல் உழைப்பு குறைந்து போகிறது. போதாக்குறைக்கு கேன்டீன் சாப்பாடு, நேரங்கெட்ட நேரத்தில் நொறுக்குத் தீனிகள், இரவில் துரித உணவுகள் என எல்லாமே அணி சேர்ந்து இவர்களுக்கு உடற்பருமனை அள்ளிக் கொடுக்கின்றன. இதுதான் சூலக நீர்க்கட்டிக்கு ஊற்றுக்கண்ணாகிறது.

மேலும், அலுவலகத்தில் ‘வொர்க்ஹாலிக்’காக இருப்பது, தொழிலில் ஜெயிக்கப் புதுப்புது யோசனைகளைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள், அவற்றை எட்டுவதற்கு மேற்கொள்ளும் தூக்கம் இல்லாத வாழ்க்கை, அவற்றால் ஏற்படும் மன அழுத்தம், அதைக் குறைக்க சிகரெட், மது, வார இறுதிக் கொண்டாட்டம் என இன்றைய இளம் பெண்களின் வாழ்க்கைமுறை நிறையவே மாறிவிடுகிறது. இதனால், அவர்களுக்குச் சுரக்கிற ஹார்மோன்களுக்குப் ‘போதை’ ஏறிவிடுகிறது. அவை சுயமிழந்து சீரில்லாமல் சுரக்கின்றன. இது, சூலக நீர்க்கட்டிக்கு உரமிட்டதுபோல் ஆகிறது.



அது என்ன ‘பி.சி.ஓ.டி.’?

        பெண்களின் கருப்பையின் இரண்டு பக்கமும் பாதாம் பருப்பு அளவில் தலா ஒரு சூலகம் (Ovary) இருக்கிறது. பருவமான பெண்களுக்கு மாதாமாதம் ‘விலக்கு’ வருவதற்கும், மணமான பெண்களுக்குக் குழந்தை உண்டாவதற்கும் தேவையான சினைமுட்டையை மாதம் ஒன்று வீதம் உருவாக்கித் தரும் அட்சயப் பாத்திரம் இது.

சூலகச் சுரப்பிகள் பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களைச் சுரப்பதோடு, ஆணுக்கான ஆன்ட்ரோஜெனையும் சிறிதளவு சுரக்கின்றன. அளவோடு கொட்டும் குற்றால அருவியில் குளிப்பது சுகமாக இருக்கும்; ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளித்தால் ஆபத்துதானே வரும்? அதுமாதிரி உடற்பருமன் உள்ளவர்களுக்கு ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவோடு சுரந்தால் ஆபத்தில்லை; அளவில்லாமல் சுரக்கும்போது பி.சி.ஓ.டி. (Poly Cystic Ovarian Disease - PCOD) ‘ஆஜர்’ ஆகி பிரச்சினை செய்கிறது.

பொதுவாகவே, பெண்களுக்குச் சூலகத்தைச் சுற்றி தேனடைபோல் ஆயிரக்கணக்கான சினைமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். இவற்றில் சில அவ்வப்போது நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். இந்த நீர்க்கட்டிகள் 12-க்கும் மேல் இருந்தால், அதை பி.சி.ஓ.டி. என்கிறோம். தடுக்கி விழுந்தவர் தலையில் தள்ளுமுள்ளுக்காரர்கள் ஏறி மிதித்தால் எப்படி இருக்கும்? அந்த விபரீதம்தான் அடுத்து நடக்கிறது. இந்தக் கட்டிகள் இன்னும் அதிகமாக ஆன்ட்ரோஜெனைச் சுரக்கவைப்பதால், இந்தப் பெண்களுக்கு ஆண் தன்மை அதிகரிப்பதோடு, முகத்திலும் உடலிலும் தேவையில்லாமல் முடிகள் முளைக்கின்றன. அதேநேரம் தலைமுடி மட்டும் உதிர்கிறது. முகப்பரு தொல்லை தருகிறது. மாதவிலக்குத் தள்ளிப் போகிறது.

இவர்களுக்கு இன்சுலினும் அதிகமாகச் சுரக்கும். ஆனால், அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு உடலில் இன்சுலின் எதிர்ப்புணர்வு அதிகரிக்கும். இதனால், சின்ன வயதிலேயே நீரிழிவு வந்துவிடும். இவர்களுக்குத் தைராய்டு சுரப்பியும் குறைவாகச் சுரக்கும். அப்போது சூறாவளி சுனாமி ஆவதுபோல் இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகும்.

உடற்பருமனைக் கட்டுப்படுத்தாமல் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குக் குழந்தை உண்டாவது தடைபடும். காரணம், இவர்களில் பல பேருக்கு மெலடோனின் ஹார்மோனும் ரத்தத்தில் அதிகரிக்கிறது. இதுவும் ஆன்ட்ரோஜெனை அதிகப்படுத்துகிற அசுரன்தான். இந்த நிலைமையைச் சீராக்க பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சில ஹார்மோன்கள் வீறுகொண்டு எழுகின்றன. ஆனாலும், பொங்கி வரும் காவிரியும் தடுப்பணைகள் இல்லாமல் கடலில் கலந்து வீணாவதுபோல், இவை எல்லாமே பெருத்த ‘பெல்லி’யின் கொழுப்பில் கரைந்து வீணாகின்றன. இதனால், அவர்களுக்குச் சூலகத்தில் சினைமுட்டை உண்டாவதில்லை; சீரான மாதவிலக்கு ஏற்படுவதில்லை; குழந்தை பாக்கியம் கிட்டுவதில்லை!

அப்படியானால், அவர்களால் அம்மா ஆகவே முடியாதா? முடியும். எப்போது தெரியுமா? பனிச்சறுக்குப் போட்டியில் பரிசு பெற வேண்டுமானால், இரண்டு கால்களிலும் சக்கரம் மாட்டிக்கொள்ள வேண்டும். அதுபோல், இவர்கள் சூலகத்தைச் சீராக்கும் சிகிச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், உடலைக் குறைக்க ‘ஒர்க்அவுட்’டும் செய்ய வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ கைகூடும்.

என்ன சிகிச்சை?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ஹார்மோன் பரிசோதனைகள், ஸ்கேன் செய்துவிட்டு, பி.சி.ஓ.டி. உறுதியானால், ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து சினைமுட்டை பிறக்கச் செய்வது சிகிச்சையின் முதற்கட்டம். இதில் மாதவிலக்குச் சீராகவில்லை என்றால், அடுத்த கட்டம் அறுவை சிகிச்சை. அதில் சூலகத்தைச் சுற்றியுள்ள நீர்க்கட்டிகளை அகற்றுகிறார்கள் அல்லது லேப்ராஸ்கோப் வழியாக லேசர் ஒளியைச் செலுத்தி, சூலகத்திலுள்ள தேவையில்லாத திசுக்களை அகற்றுகிறார்கள். இப்படி, ஆன்ட்ரோஜென் சுரப்புக்குக் கடிவாளம் போடுகிறார்கள்.

என்றாலும், இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுதான் தரும். சிகிச்சையை நிறுத்தியதும், விரட்டப்பட்ட வளர்ப்புப் பிராணி மறுபடியும் நம் வீட்டுக்கே வந்துவிடுவதுபோல் பி.சி.ஓ.டி.யும் திரும்பி வந்து, அடுத்த குழந்தைக்குத் தடைபோடும்.

எனவே, இவர்களுக்கான சரியான சிகிச்சை உடற்பருமனுக்கு ‘விலங்கு’ பூட்டுவதே! அதற்கு ‘மந்திரத்தில் மாங்காய் காய்க்கும்’ என்று எதிர்பார்க்கக்கூடாது; மருந்து, மாத்திரை எங்கே கிடைக்கும் என்று கூகுளில் தேடக்கூடாது. ஒரே வழி - நேர்வழி - இதுதான்: அரிசி உணவைக் குறைக்க வேண்டும்; உடற்பயிற்சிகளைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சி நல்லது. நீச்சலடிப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் சூலகத்துக்குத் தோள் கொடுக்கும். யோகாவும் உதவும். சின்ன வயது முதலே இவற்றைப் பின்பற்றுபவர்களுக்குப் பின்னங்கால் பிடரியில் பட ஓடியே போகும், பி.சி.ஓ.டி.

பி.சி.ஓ.டி.யைத் தடுக்கும் உணவுமுறை.


தானியங்கள்
    

கம்பு, சோளம், சாமை, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, பிரவுன் அரிசி சாப்பிடலாம்.

பருப்புகள்
    

உளுந்து, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, காராமணி, ரஜ்மா, மொச்சை, கடலைப் பருப்பு சாப்பிடலாம்.

பழங்கள், கீரைகள்

    


அனைத்தும் சாப்பிடலாம்.

காய்கறிகள்
    

கிழங்குகளை அளவாகச் சாப்பிடவும். மற்ற காய்கறிகளைத் தேவைக்குச் சாப்பிடலாம்.

பால் பொருட்கள்
    

ஆடை நீக்கப்பட்ட நீர் மோர் நல்லது.

கொட்டை வகைகள்
    

பாதாம், வால்நட், உலர் திராட்சை சாப்பிடலாம்.

அசைவம்
    

முட்டையில் வெள்ளைக் கரு, மீன், தோல் நீக்கப்பட்ட நாட்டுக்கோழி வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

எண்ணெய்
    

செக்கில் ஆட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் நல்லது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய் அளவாகப் பயன்படுத்தவும்.

வேண்டாமே!
    

வெள்ளை அரிசி, மைதா, பாமாயில், வனஸ்பதி, மஞ்சள் கரு, தயிர், வெண்ணெய், நெய், சீஸ், செயற்கைப் பழச்சாறுகள், இனிப்புகள், குளிர்பானங்கள், கேக்குகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், பிற நொறுக்குத் தீனிகள்.

 

16.09.2018 காமதேனு இதழ்.

Comments

  1. தங்கள் கட்டுரை பாமரர்களையும்,படித்தவர்களையும் எளிதில் புரிந்து"கொள்ளச் செய்கிறது.வாழ்க தங்களின் ஏழை,எளியவர்களுக்கான மருத்துவ சேவை.வளர்க தங்களின் அறிவுதாகத்தை தீர்க்க உதவும் அற்புதமான கட்டுரைகள்....Dr.TNR....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?