அலறவைக்கும் ஆஸ்துமா!

  

மழைக்காலம் சிறப்புக் கட்டுரை

 

 

டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்


                                        அலறவைக்கும் ஆஸ்துமா

“ஒரு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும்” என்னும் விதிக்குள் அடங்கும் நோய் வரிசையில் முதலிடம் பிடிப்பது ஆஸ்துமா. சுவாசக்காற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்கள் உலகில் அதிகரித்து வருகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் சுமார் 34 கோடி பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு 2 கோடி பேர்.

ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். ஆஸ்துமா என்பது நோயல்ல. ‘மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு’தான் ஆஸ்துமா. இது தொற்றுநோயுமில்லை; ஆபத்தானதுமில்லை; ஆனால், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 5லிருந்து 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 100ல் 15 பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் ஆஸ்துமா பாதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியென்றால் ஆஸ்துமாவின் ஆக்ரோஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆஸ்துமா வகைகள்

மூச்சுக்குழாய் சுருங்கி, சளி அடைத்து, இளைப்பு வருவது ‘மூச்சுக்குழாய் ஆஸ்துமா’ (Bronchial asthma). இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இரண்டே இரண்டுதான். வெளியூர் விருந்தாளிபோல் வெளிப்புறக் காரணிகளால் அவ்வப்போது வரும் ஆஸ்துமா (Extrinsic Asthma) ஒருவகை. மற்றொன்று, உள்ளூர் விருந்தாளிபோல் உடல் சார்ந்த பிரச்சினைகளால் எப்போதும் ஏற்படும் ஆஸ்துமா (Intrinsic Asthma). முதலாம் வகை ஒவ்வாமையால் ஏற்படக்கூடியது. காற்று, உணவு, சுற்றியிருக்கும் பொருள்கள் என எதன் வழியாகவும் இவ்வகை ஆஸ்துமா வரலாம். இரண்டாவது வகை பரம்பரை காரணமாக ஏற்படுகிற பாதிப்பு. குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிற ஆஸ்துமா இந்த வகையைச் சேர்ந்தது.

ஒவ்வாமைப் பிரச்சினையிலும் பல வகை உண்டு. முக்கியமான மூன்று வகைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பொருள்கள் மூலம் ஒவ்வாமை ஏற்படுவது முதல் வகை. வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஏற்படுகிற ஒவ்வாமைப் பிரச்சினைகள் அடுத்த வகை. பணியிடங்களில் உள்ள ஒவ்வாமைக் காரணிகள் மூன்றாம் வகை.

அறிகுறிகள் அறிவோம்!

மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிடச் சிரமப்படுகிறீர்கள். நெஞ்சில் பாரம் வைத்த மாதிரி உணர்கிறீர்கள். நுரையீரலில் ‘விசில்’ சத்தம் கேட்கிறது. அப்படியானால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு ‘விசில்’ சத்தம் கேட்காது; இருமல் மட்டுமே இருக்கும். அதிலும் இரவில்தான் இந்த இருமல் அதிகம் தொல்லை தரும். இதுவும் ஆஸ்துமாவைச் சேர்ந்ததுதான்.

காரணங்கள் என்ன?

அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு அது வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவீதம் வாய்ப்பு உண்டு. புத்தகத்தில் ஏற்படும் அச்சுப்பிழைபோல இவர்களுக்கு மரபணுவில் பிழை உண்டாகிற காரணத்தால் இப்படிப் பரம்பரை பரம்பரையாக ஆஸ்துமா வருகிறது.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல்  போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு உரம் போடும்.

பொதுவாகவே ஒவ்வாமைப் பிரச்சினையை அதிகப்படுத்துவதில் முன்னிலை வகிப்பது ‘டஸ்ட் மைட்’ (Dust mite) எனும் உண்ணிகள். இவை பதுங்கித் தாக்கும் பகைவர்கள். வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் படுக்கை விரிப்பு, தலையணை உறை, போர்வை, துணியால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவற்றில் இந்த உண்ணிகள் பதுங்கியிருக்கும். ஆனால் இவை நம் கண்ணுக்குத் தெரியாது. இவற்றின் மலக்கழிவில் ஒருவிதப் புரதம் வெளியேறும். அதுதான் ஆஸ்துமாவுக்கு அழைப்பிதழ் அனுப்பும். தவிரவும் செயற்கை நிறங்களை அள்ளித் தருகிற அந்நிய உணவுகள், சாம்பிராணிப் புகை, விறகு அடுப்புப் புகை, செல்லப்பிராணிகளின் உடலிலிருந்து உதிரும் ரோமம் இப்படிப் பலதும் பலருக்கு ஒவ்வாமையாகி ஆஸ்துமாவோடு கைகுலுக்கும்.

ஆதித்யா பிளஸ் டூ மாணவி. கோவையில் தனியார் ‘நீட் கோச்சிங்’கில் சேர்ந்திருந்தார். விடுதி வாழ்க்கை அவளுக்குப் புதிது. அங்கு சேர்ந்ததிலிருந்து அவளுக்கு ஆஸ்துமா ஆரம்பித்துவிட்டது. அவளுக்குப் புதிய இடத்தில் தண்ணீர் சேராமல்தான் ஆஸ்துமா வருகிறது என நினைத்து, சில வாரங்கள் அவள் வீட்டில் இருந்தாள். அப்போது அவளுக்கு ஆஸ்துமா இல்லை. ஆனால், விடுதிக்குத் திரும்பியதும் கூடு திரும்பும் பறவைபோல் ஆஸ்துமாவும் திரும்பிவிட்டது. பெற்றோர் என்னிடம் அவளை அழைத்து வந்தனர். விசாரித்ததில் பெரும்பாலும் குளித்து முடித்ததும் அவளுக்கு ஆஸ்துமா வருவதாகச் சொன்னாள்.

அப்படியானால், குளிப்பறை/கழிப்பறையில்தான் பிரச்சினை என்பது புரிந்தது. அதனால் அவளுக்கு இந்த யோசனையைச் சொன்னேன்: “சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்கள், குளிப்பறை/கழிப்பறையைக் கழுவப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், கரப்பான் பூச்சி/கொசுவைக் கொல்லும் மருந்துகள் போன்றவை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஆஸ்துமா வரலாம். இந்தப் பொருள்களை ஒவ்வொன்றாக ஒதுக்கிப் பார்த்தால் உனக்கு எது எதிரி என்பது தெரிந்துவிடும்” என்று சொல்லி அனுப்பினேன். ஆதித்யாவும் அப்படியே செய்தாள்; காரணமும் கண்டுபிடித்துவிட்டாள்.

“அங்கிள், எனக்குக் கரப்பான் பூச்சி மருந்துதான் அலர்ஜியாகி இருக்கிறது. அந்த மருந்தை என் குளிப்பறையில் வைத்திருந்தார்கள். அதை வேறு இடத்துக்கு மாற்றியதும் எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இல்லை!” என்று எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இலவச இடம் கிடைத்தமாதிரி ஏகப்பட்ட சந்தோஷத்துடன் அலைபேசினாள். இதேபோல் வீட்டில் ஈரம் கசிந்து பாசிபிடித்தத் தண்ணீர்க் குழாய்களில் பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்திருந்தாலும் அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

புகை எல்லாம் பகையே!

வெளியிடங்களிலிருந்து ஒவ்வாமை உண்டாவதற்கு நாள்தோறும் பெருகி வரும் வாகனப் புகைதான் முக்கியக் காரணம். இதையடுத்து, சிகரெட் புகை, பூச்சிக்கொல்லிப் புகை, வைக்கோல்/குப்பைகளை எரிக்கும்போது வெளியேறும் புகை போன்றவை காரணமாக இருக்கும். சிலருக்கு செடி, கொடி, மரங்களிலிருந்து வரும் மகரந்தங்கள் மற்றும் காற்றில் கலந்து வரும் சில வகை பூஞ்சைத் துகள்களும் ஒவ்வாமையாகி ஆஸ்துமாவுக்கு ‘டெண்டர்’ எடுக்கும். குளிர்ந்த காற்று, பனிக்காற்று, அனல் காற்று போன்ற பருவநிலை மாற்றங்களும் ஆஸ்துமாவுக்கு ஆகாத அந்நியர்களே. மற்ற பருவகாலங்களைவிட மழைக்காலமும் பனிக்காலமும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மிகுந்த சோதனைக்காலங்கள் என்றே சொல்லலாம்.

பலருக்கு வேலை செய்யும் இடங்களில் ஒவ்வாமைப் பொருள்கள் இருக்கும். மர வேலை, மாவு, பஞ்சு, நூல், துணி, கம்பளி, ரசாயனம், சிமிண்ட் ஆலைகள் அல்லது விற்பனைக் கூடங்கள், தோல் பதனிடும் தொழில் என இதற்குரிய உதாரணங்கள் வேட்பாளர் பட்டியல்போல் நீளும். இன்று நாம் காணும் தொழிற்புரட்சியில் புகை கக்காத தொழிற்சாலை என்று எதுவுமில்லை. அந்தப் புகையை எதிர்கொள்ளும்போது கஜா புயல் நம்மைக் கலங்கடித்ததுபோல் நுரையீரல் கலங்கிப்போகும்; ஆஸ்துமா அகோரமாகும்.

இவை தவிர, மனம் சார்ந்த பிரச்சினைகளால்கூட ஆஸ்துமா வரலாம். நவீன வாழ்வியலின் நற்கொடைகளான மன அழுத்தம், மனக்கவலை, பதற்றம், பரபரப்பு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு கொசுக்கடி, எறும்புக் கடி போன்ற விஷக்கடிகள் காரணமாக ஆஸ்துமா வருகிறது. இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதுகூட ஆஸ்துமாவை வரவேற்கிறது.

ஆஸ்துமா ஏற்படும் விதம்

இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்த் (Bronchus) தசைகளைத் தாக்குவதால் அந்தத் தசைகள் தொட்டாச்சிணுங்கிபோல் சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சுச் சிறுகுழாய்கள் (Bronchioles) தங்கள் பங்குக்கு இன்னும் அதிகமாகச் சுருங்கிவிட மூச்சுக்குழாய் சவ்வு வீங்கிவிடுகிறது. பிரதான சாலையில் எதிர்பாராமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்துவிட்டால் வாகனம் செல்லும் பாதை சுருங்கிவிடுமல்லவா? அதுமாதிரிதான் இப்போது மூச்சுப்பாதை சுருங்கிப்போகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக்குழாய் சவ்விலிருந்து திரவம் சுரக்கிறது. இதனால் ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதை இன்னும் அதிகமாக அடைத்துக்கொள்கிறது. எப்படி ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவலர்கள் தடியடி கொடுத்துக் களைக்கும்போது சாலையில் வாகனம் எதுவும் செல்லமுடியாதோ, அப்படி ஒரு களேபர நிலைமை நம் சுவாசப்பாதையில் உண்டாவதால் மூச்சு முட்டுகிறது. அதிலும் மூச்சை வெளியில் விடத்தான் சிரமமாக இருக்கிறது. ரொம்பவும் சிறுத்துவிட்ட சிறுகுழாய்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’ (வீசிங்) சத்தமும் கேட்கிறது. அப்போது ‘ஐயோ....ஆஸ்துமா!’ என்று அலறத் தோன்றுகிறது.

ஆனாலும், இன்றைய மருத்துவ வளர்ச்சியில் நம்மை அலற வைக்கும் ஆஸ்துமாவையும் அலறி ஓட வைக்கலாம். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

09.12. 2018 காமதேனு வார இதழ்.

பெட்டிச் செய்தி:    

 என்ன பரிசோதனை செய்வது?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் ஆகியவற்றுடன் ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) மற்றும் ‘பீக் ஃப்ளோ மீட்டர்’ (Peak flow meter) பரிசோதனை மூலம் மூச்சுக்குழாயில் எந்த அளவுக்குப் பாதிப்பு/அடைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றவாறு சிகிச்சைமுறைகளைத் தீர்மானிக்க முடியும்.

 

===========================================================================================================

 டாக்டர் கு . கணேசன் MBBS.

நான் யார்?

பொதுநல மருத்துவன். மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘கணேஷ் மருத்துவமனை’யை நடத்தி வருகிறேன். மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

மருத்துவ அறிவியல் எழுத்தாளர். இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன்.

தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், குமுதம், குங்குமம், கல்கி, ஹெல்த் & பியூட்டி, டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், குமுதம் ஹெல்த், கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்பு. தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதான ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித்துறையின் விருது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ‘மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப்பேராய விருது’, சென்னை, முத்து பார்மஸியின் ‘சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின் ‘தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன். பாரதிப் பணிச் செல்வர், மருத்துவ இலக்கிய மாமணி எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

மனைவி லலிதா. மகன் டாக்டர் க. திவாகர், (ஜெம் மருத்துவமனை, கோவை). மருமகள் டாக்டர் பௌசியா. பேத்தி தியா. மகள் டாக்டர் க. ஆர்த்தி.

முகவரி:

                Dr. G. Ganesan, MBBS.,        Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,     RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT             Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

வலை தளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

===========================================================================================================

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?