அச்சுறுத்தும் மன அழுத்தம் : மீள்வது எப்படி?

  

               இன்று (09.10.2020) உலக மனநல தினம். சிறப்புக் கட்டுரை.



டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்



                                                                                                           மன நலம் :





       அச்சுறுத்தும் மன அழுத்தம் : மீள்வது எப்படி?


லுவலகத்தில் திடீரென்று மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக அபர்ணாவை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர், “அபர்ணாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் மயக்கம் வந்திருக்கிறது” என்று சொன்னபோது, அவள் வீட்டில் பயந்தே போனார்கள்.

தனியார் ஐ.டி. கம்பெனியில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் அபர்ணா. அவளுக்கு முப்பது வயதுதான் ஆகிறது. இந்தச் சின்ன வயதில் BP கூடுவதற்கு என்ன காரணம்? அடுத்தகட்ட சிகிச்சைக்காக டாக்டர் அவளை விசாரித்தார்.

“டாக்டர்! கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் மனசுக்குள் சந்தோஷம் இல்லை. என் கணவருக்கும் தனியார் கம்பெனியில்தான் வேலை. தினமும் இரண்டு பேரும் எட்டுக் கால் பாய்ச்சலில் ஓட வேண்டிய சூழல். பணிச்சுமை அதிகம். இரவு வீட்டுக்குத் தாமதமாக வருவதால் கணவருடன் சரியான பிணைப்பு இல்லை. திருமணமாகி மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் குழந்தை இல்லை. மாமியாருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எந்த நேரமும் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். மனசு படபடப்பாக இருக்கிறது. அடிக்கடி உடம்பு வேர்க்கிறது. வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. மற்றவர்களின்மீது எரிச்சல் வருகிறது. நாம் ஏன் வாழ வேண்டும் என்றம் எண்ணம்தான் எழுகிறது” என்றாள். டாக்டருக்கு அபர்ணாவின் பிரச்னை புரிந்துவிட்டது.

டாக்டர் அவள் வீட்டாரிடம், “அபர்ணாவுக்குக் குழந்தை இல்லை எனும் மனக்கவலை அவருடைய மனநிலையைப் பாதித்துள்ளது; அதை வெளியில் சொல்லாமல் அடக்கிக்கொண்டதால், மன அழுத்தம் அதிகமாகி, BP கூடிவிட்டது. மயக்கம் வந்திருக்கிறது. அதற்கு முறைப்படி சிகிச்சை எடுத்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று சொன்னவர், சிகிச்சை கொடுத்ததும் அபர்ணா அதிலிருந்து மீண்டு விட்டாள்.

ஆனால், அபர்ணாவைப்போல் பல ஆயிரம் பெண்களை நம்மிடையே பார்க்க முடியும். ஒவ்வொருத்தருக்கும் மன அழுத்தத்துக்கான காரணம்தான் வேறுபடுகிறது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது மன அழுத்தம் என்பதையும், அதற்கு முறைப்படி சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும் என்பதையும் அறியாமலே தினமும் கஷ்டப்படுகிறார்கள்.

குடும்ப வழியிலும், அலுவல் சூழலிலும், சமுதாய ரீதியாகவும் மன அழுத்தம் ஏற்படுவது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதுதான் என்றாலும், பெண்களுக்கு உடலியல் ரீதியாகவும் அது ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

காரணம் தெளிவோமா?

பெண்களுக்கு ‘பிரீமென்ஸுரல் சின்ட்ரோம்’ எனப்படும் மாதவிலக்கு தினங்களுக்கு முந்தைய நிலைமை, அவர்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக உண்டாகிறது. ஒருவித பயம், பதற்றத்துடன் தொடங்கும் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனித்துத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், நீடித்த மன அழுத்தத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இதுபோல் 40 வயதுக்குப் பிறகு மெனோபாஸ் தொடங்கும் காலத்திலும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்கு மூளையில் செரட்டோனின், டோபமின் ஆகிய ரசாயனச் சுரப்புகளின் சமநிலை பாதிக்கப்படுவதுதான் அடிப்படைக் காரணம். சில சமயம் எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலேயே சிலருக்கு மன அழுத்தம் தீர்ந்திருக்கும். அப்போது அவர்களுக்கு இந்த ரசாயனங்கள் தானாகவே சரியாகியிருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

சிறார்களித்திலும் இந்த மன அழுத்தத்தை இப்போதைய லைஃப் ஸ்டைலில் பார்க்க முடிகிறது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் அம்மாவுக்கு நேர நெருக்கடி. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. அம்மாவுக்கு உதவ தாத்தா, பாட்டி வீட்டில் இல்லை; குழந்தைகள் மனம் விட்டுப் பேச வீட்டில் ஆட்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களின் பெரும்பாலான நேரத்தை அலைபேசிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. சிறார்கள் எதிர்பார்க்கும் சின்னச் சின்ன அரவணைப்புக்குக்கூடக் கடுமையான பஞ்சம். உணவை மட்டும் ஊட்டி ஊட்டி உள்ளத்து வலிகளைத் தீர்க்க முடியாது என்னும் ‘குழந்தை வளர்ப்பு ரகசியம்’ இன்றைய அம்மாக்களுக்குத் தெரியவில்லை. இதனால் சிறார்களிடத்தில் செரட்டோனின் கூடுதலாகி மன அழுத்தம் சீக்கிரமே அரியணை ஏற வசதி செய்கிறது.

டீன் ஏஜில் உள்ளவர்களில் பலருக்கும் வேலையில்லை என்னும் கவலை இருக்கிறது; வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலை நிரந்தரமில்லை என்றோ குறைந்த சம்பளம் என்றோ கவலை இருக்கிறது. உயர் அதிகாரிகளுக்கு மீட்டிங், டார்கெட் என எந்நேரமும் பரபரப்பாக இயங்க வேண்டியதிருக்கிறது. சிலருக்குக் காதல் தோல்வியும் காரணமாகிறது.

நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்குத் திருமணம் ஆகாதது, எதிர்பாராமல் ஏற்படும் துயரங்கள், தோல்விகள், பொருளாதாரப் பின்னடைவு, ஒப்பீட்டு வாழ்க்கை போன்றவை காரணமாகலாம். இல்லத்தரசிகளுக்குக் குடிகாரக் கணவர், குடும்பச் சுமை, குழந்தையில்லை என்னும் குறை, முரட்டுப் பிள்ளைகள், குடும்ப உறவுகளில் சிக்கல்கள் என்று பல பிரச்னைகள் மன அழுத்தத்தை அழைத்து வருகின்றன. முதியவர்களுக்கோ தனிமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாட்பட்ட நோய்கள்!

அறிகுறிகளை அறிவோமா?

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முதல் கட்ட அறிகுறியாக அதீத உறக்கம் வரும். காலையில் எழுவது தாமதமாகும். சோம்பேறித்தனமாக இருக்கும். பசிக்காது. சாப்பிடப் பிடிக்காது. எந்நேரமும் களைப்பாக இருக்கும். தலைவலி, உடல்வலி, தசைவலி, கழுத்துவலி, கால்வலி எனப் பலதரப்பட்ட வலிகள் தொல்லை கொடுக்கும். இந்த வலிகள் எல்லாமே மனம் சார்ந்தவை என்பதால், வலி போக்கும் மருந்துகளுக்குத் தற்காலிக நிவாரணமே கிடைக்கும். பயமும் பதற்றமும் நெருப்பாய் பற்றிக்கொள்ளும்.

அடுத்தகட்டத்தில் முகத்தில் சிரிப்பு மறைந்து, இறுக்கம் படரும். அடுத்தவர்களுடன் கலகலப்பாகப் பேசுவதும், பழகுவதும் குறைந்துவிடும். மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிப்போவதும் தனிமையை விரும்புவதும் தனிமையில் அழுவதும் அன்றாடம் நிகழும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகும். குடிப்பழக்கமும், போதைப்பழக்கமும் கூடிக்குலாவும்.

இறுதிக்கட்டத்தில் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து, வாழ்க்கையில் தான் தோற்று விட்டதாக எண்ணத் தோன்றும். என்னால் எவருக்கும் பயனில்லை; என்னை எவருக்கும் பிடிக்கவில்லை; எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனசுக்குள் ‘ரீப்ளே’ ஆவதால், ‘இனிமேல் வாழ்ந்து பயனில்லை’ என முடிவுக்கு வந்து, தற்கொலை முயற்சியில் இறங்குவார்கள்.

இவை மட்டுமல்ல, மன அழுத்தம் அதிகமாகும்போது உடலில் பொது ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அஜீரணம், அல்சர், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, ஐபிஎஸ் (IBS) நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு போன்ற பல பிரச்னைகளுக்கு அது வாசல் வைக்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காகும். மனம் நெருக்கடியில் இருக்கும்போது உடலில் சாதாரண கட்டிகள்கூடப் புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு என்கிறது அறிவியல்.

மூன்றுவித நோய் நிலைகள்

மன அழுத்தத்தின் அறிகுறிகளை வைத்து ஆரம்ப நிலை, மத்திய நிலை. மோசமான நிலை எனப் பிரித்து சிகிச்சை கொடுப்பது நடைமுறை. மன அழுத்தம் போக்க மூளையின் ரசாயனச் சுரப்புகளைச் சமநிலைப்படுத்தும் மருந்துகள் தரப்படும். கூடவே சிந்தனை சார்ந்த நடத்தைப் பயிற்சிகளும், உறவுகள் மேம்பட ஆலோசனைகளும் தேவைப்படும். மன அழுத்தம் கடுமையாக உள்ளவர்களுக்கு ‘மின்தூண்டல் சிகிச்சை’ அளிக்கப்படும். பசிக்கும் குழந்தைக்கு நாக்கில் தேன் தடவி உறங்க வைக்க முடியாது என்பதுபோல் மன அழுத்தம் மறைய இவை மட்டுமே போதாது. தேவை இன்னும் இருக்கிறது. அவை என்ன?

இதோ அந்த மீளும் வழிகள்!

மன அழுத்தத்தின் ஆரம்பக்கட்டத்தில் சோம்பேறித்தனம்தான் முக்கியப் பிரச்னையாக இருக்கும். உடனே அதைச் சரிசெய்து விட வேண்டும். அப்போதுதான் ஆபத்துகள் அணிவகுக்காது. அதற்கு நம் அன்றாட நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, குளிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, வெளியில் செல்வது என முறைப்படுத்த வேண்டியது முக்கியம்.

பட்டினியோடு வேலைக்குப் போக வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிட வேண்டியது அவசியம். உணவு இல்லாத களைப்பு மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். உங்கள் மீதே எரிச்சல்கொள்ள வைக்கும்; கோபம் வரும்.

ஓய்வு நேரங்களில், உங்கள் வழக்கமான பணிகளிலிருந்து விலகி, புதிதாக ஒன்றைப் பிடித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, இசை கேட்கலாம்; கற்கலாம். நாட்டியம் ஆடலாம். ஓவியம் தீட்டிப் பழகலாம். பெயின்டிங் பண்ணலாம். புத்தகம் படிக்கலாம். தோட்ட வேலையில் இறங்கலாம். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யலாம். நட்பு வட்டத்தை விரிவாக்கி, மனம்விட்டுப் பேசலாம்.

இது இப்போது மிக முக்கியம்…சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்துக்கு மேல் செலவிட வேண்டாம். பதிலாக, வீட்டில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள். வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். மனம் லேசாகும். அடுத்து, ‘தினமும் ஒரு ‘பெக்’ மது குடித்தால் மன அழுத்தம் மறைந்துவிடும்’ என்று யாரோ தப்பாகச் சொன்னதைப் புலிவால்போல் பிடித்துக் கொள்ளாதீர்கள். மது, மன அழுத்தத்தை மோசமாக்குமே தவிர சீராக்குவதில்லை. எனவே, மதுவை மறந்துவிடுங்கள். மாறாக, மனத்தில் தேங்கி நிற்கும் பிரச்னைகளை நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அதனால் அந்தக் காயங்கள் சீக்கிரமே ஆறிவிடும்.

தேவை குடும்பத்தினரின் அனுசரணை!

மன அழுத்தத்தை விரட்டுவதற்குக் குடும்பத்தாரின் ஆதரவு மிக மிக அவசியம். பாதிக்கப்பட்டவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.

அவரைத் திறந்த மனதுடன் பேச வைக்கவும், அவர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்லவும் குடும்பத்தினர் பழகிக்கொள்ள வேண்டும். அவர் சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபட உதவ வேண்டும். அவர் சீரான உணவு சாப்பிடவும், சரியான உறக்கம் கொள்ளவும், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சரியானபடிச் சாப்பிடவும் உதவ வேண்டும். அவருடைய எதிர்மறை எண்ணங்களைப் போக்கவும், வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படவும், தற்கொலை எண்ணங்கள் தவிடுபொடியாகவும் குடும்பத்தினரின் அனுசரணையும் ஆதரவான வார்த்தைகளும் தேவைப்படும். அன்பு தடவிய அந்த வார்த்தைகளே பலருக்கும் மன அழுத்தத்தைப் போக்கும் மந்திரங்களாக அமையும்.

பெட்டிச் செய்தி: 1

ஸ்ட்ரெஸ் டேட்டா!

·         உலகில் 30 கோடிப் பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது.

·          இந்தியாவில் 7 கோடிப் பேருக்கு மன அழுத்த பாதிப்பு இருக்கிறது.

·          ஆண்கள் 40 - 49 வயதுக்குள் அதிக எண்ணிக்கையில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

·          பெண்களுக்கு 25லிருந்து 45 வயதுவரை மன அழுத்தத்துக்கான காலகட்டம்.

·    எட்டு பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் எப்படியாவது ஒருமுறை மன அழுத்தம் காரணமாகத் துன்பப்படுகிறார்.

·          இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்டவர்களே!

·          மது குடிப்பவர்கள் மற்றும் போதை மாத்திரைகளைச் சாப்பிடுபவர்களில் 20 சதவீதம் பேருக்குக் கடுமையான மன அழுத்தம் இருக்கிறது.

பெட்டிச் செய்தி: 2

உதவிக்கு வரும் உடற்பயிற்சிகள்!

மன அழுத்தத்திலிருந்து வெளியே வர போதுமான ஓய்வும் உறக்கமும் அவசியம். மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் மிக மிக அவசியம். தினமும் முப்பது நிமிடங்கள் போதும். அது நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா, குழு விளையாட்டு, தியானம் என எதுவாகவும் இருக்கலாம். இம்மாதிரியான பயிற்சிகளின்போது மூளைக்குள் ‘என்டார்பின்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது மூளையை சுறுசுறுப்பாக்கிவிடுகிறது. உடல் உற்சாகம் பெறுகிறது. மன அழுத்தம் ஓடிப்போகிறது.

29.01.2020 குமுதம் இதழ்

===========================================================================================================

முகவரி:

Dr.G.Ganesan, MBBS.,  Ganesh Hospital,  19-A, Angiah Raja Street,  RAJAPALAYAM-626 117   Mobile: 99524 34190     e-mail: gganesan95@gmail.com

வலை தளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?