சர்க்கரை நோய் : வரும் ஆனால் வராது! எப்படி?

  

 

 

சர்க்கரை நோய் அறிவோம் - 1

 


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 சர்க்கரை நோய் :

வரும் ஆனால் வராது!

எப்படி?


‘இது என்ன அர்த்தநாரீஸ்வரத் தலைப்பு’ என்று யோசிக்கிறீர்களா? ‘தலைப்பு சரிதான்’ என்று சாட்சி சொல்ல இங்கே இருவர் இருக்கிறார்கள். ஒருவர் சுந்தரமூர்த்தி; பஞ்சு வியாபாரி. ஒருமுறை காய்ச்சலுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். ரத்தப் பரிசோதனை அவருக்கு ‘மலேரியா’ என்றது; அப்போது ரத்தத்தில் சர்க்கரையும் சற்றே அதிகமாக இருந்தது. அதனால், “உங்களுக்குச் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. உணவைக் குறைத்து உடலைக் குறையுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஃபிட்னெஸ் முக்கியம்” என எச்சரித்தேன். அதற்கு அவர் உடன்படவில்லை. மலேரியா சரியான பிறகு மறுபரிசோதனைக்கும் அவர் வரவில்லை.

பல வருடங்கள் கழித்து ஒரு ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். மனிதர் எலும்பும் தோலுமாக இருந்தார். விசாரித்தேன். “மன்னிக்கனும், டாக்டர்! அன்றைக்கு உங்கள் ஆலோசனையை நான் ஏற்க மறுத்தேன். நீங்கள் எச்சரித்ததுபோல் எனக்குச் சர்க்கரை நோய் வந்துவிட்டது. சென்னையில் சிகிச்சை எடுத்தேன்; வியாபார மும்முரத்தில் மாத்திரைகளை ஒழுங்காக விழுங்கவில்லை. என் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இன்சுலின் போட வேண்டியது கட்டாயமாகிவிட்டது. அதையும் நான் சரியாகப் போட்டுக்கொள்ளவில்லை. அதன் விளைவை நன்றாக அனுபவித்தேன். முதலில் கண் பார்வையில் பாதியை இழந்தேன். அதன்பிறகு வலது கால் பாதம் இழந்தேன். இப்போது மாரடைப்பு. பைபாஸ் ஆபரேஷனுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார் மிகுந்த வருத்தத்துடன்.

அடுத்தவர், அரங்கநாதன். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மேலதிகாரி. ஒருமுறை ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்தபோது, அவருக்கும் ரத்தச் சர்க்கரை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது; சர்க்கரை நோய் வராமல் தடுக்க வழக்கமான ஆலோசனைகளைச் சொன்னேன். அளவான உணவின் அவசியம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினேன். அடுத்த நாளிலிருந்து அவர் சிரமேற்கொண்டு என் வழி நடந்தார். ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் நான் சொன்னதை இன்றைக்கும் அவர் விட்டுவிடவில்லை; சென்ற மாதம்கூடப் பரிசோதனைக்கு வந்திருந்தார். இன்றுவரை அவருக்குச் சர்க்கரை நோய் இல்லை.

‘வரும் ஆனால் வராது!’ - எப்படி?

இன்றைய தினம் நவீன வாழ்க்கைமுறைகள் நமக்காக ஏற்பாடு செய்யும் தொற்றா நோய்க்கூட்டத்தில் முதல் வரிசை ‘வி.ஐ.பி’ சர்க்கரை நோய். ‘இனிப்பு தேச’மாகிவிட்ட இந்தி்யாவில் சுமார் 8 கோடி பேருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு ஒரு கோடி. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் தவிர, இந்தியாவில் இன்னும் 8 கோடி பேருக்குச் சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ‘ப்ரிடயாபிடிஸ்’ (Prediabetes) எனப்படும் ‘சர்க்கரை நோயின் ஆரம்பநிலை’யில் இவர்கள் இருக்கிறார்கள். இதைக் காலத்தோடு கவனித்துவிட்டால், துப்பாக்கியுடன் காத்திருக்கும் கமாண்டோவைப் பார்த்த எதிராளிபோல் ஓடிஒளிந்துவிடும்; கவனிக்காவிட்டால், சர்க்கரை நோய்க்குச் சீக்கிரத்தில் தலைவாசல் வைத்துவிடும். இவர்களைப் பொறுத்தவரை சர்க்கரை நோய் வருவதும் வராததும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் சொன்னேன்….‘வரும் ஆனால் வராது’ என்று!

சர்க்கரை நோய் வரும் வழி!

கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. இதுதான்  ரத்தத்தில் உள்ள  சர்க்கரையை அதாவது குளுக்கோஸைக் கட்டுப்படுத்தி உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. நாம் சாப்பிட்டதும்உணவிலுள்ள 'கார்போ' எனும் மாவுச்சத்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. உடனே இன்சுலின் சுரந்து, ரத்த ஓட்டத்தில் கலந்துஒவ்வொரு செல்லுக்கும் செல்கிறது. செல்களில் இன்சுலின் ஏற்பான்’ (Insulin Receptor) எனும் பூட்டு’ இருக்கிறது. அந்தப் பூட்டைத் திறக்கும் சாவிதான்இன்சுலின். அதாவதுபூட்டில் சாவியை நுழைத்துத் திறப்பதுபோல்இன்சுலின் இந்த ஏற்பான்களோடு இணையும்போது மட்டுமேசெல்சுவர்களில் குளுக்கோஸ் கதவுகள்’ திறக்கின்றன. குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைந்து சக்தியாக மாறுகிறது.

அதேநேரம்ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் முழுவதுமே செல்களுக்குள் நுழைந்துவிட முடியாது. அதற்கும் ஓர் அளவு உண்டு. அந்த அளவுக்குக் குளுக்கோஸ் செல்களுக்குள் சென்றவுடன்,  குளுக்கோஸ் கதவுகள்’ மூடிக்கொள்கின்றன. அடுத்தடுத்து குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

அப்போதுரத்தத்தில் மிஞ்சும் குளுக்கோஸ் 140மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால்அந்தக் குளுக்கோஸை, இன்சுலின் கல்லீரலுக்கும் உடல் தசைகளுக்கும் எடுத்துச்சென்றுகிளைக்கோஜெனாக மாற்றிசேமித்து வைக்கிறது. இதனால், ரத்தக் குளுக்கோஸ் அளவு குறைகிறது. இந்த அளவு 100மி.கி./டெ.லி.க்கு வந்ததும்கணையம் இன்சுலின் சுரப்பதைக் குறைத்துக்கொள்கிறது. இவ்வாறுஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை 100 முதல் 140மி.கி./டெ.லி.வரை இருக்கும்படி இன்சுலின் பார்த்துக்கொள்கிறது.

பிரச்சினை எப்போது ஆரம்பிக்கிறது என்றால், ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் சோம்பேறித்தனமாகச் செயல்பட்டாலோ ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் குழந்தைகள் கும்மாளம் போடுவதுபோல் ரத்தச் சர்க்கரை கூடிக்கும்மாளமிடுகிறது. அப்போது உடலில் வளர்சிதை மாற்றம் தடுமாறுகிறது. அந்த நிலைமையைத்தான் ‘சர்க்கரை நோய்’ என்கிறோம்.

பரம்பரை சொத்து!

சர்க்கரை நோய் ஒரு பரம்பரை 'சொத்து'. பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால்,  வாரிசுகளுக்கு அது வருவதற்கு 99%  வாய்ப்புண்டுபெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருக்குமானால், 50% வாய்ப்புண்டு. வேட்டியில் பட்ட இரும்புக் கறை போகாதல்லவா? அதுபோல் இவர்களுக்கு இன்சுலினைச் சுரக்கச் செய்யும் மரபணுக்களில் பிறவிப்பிழை உண்டாவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது.

சுமையாகும் பருமன்!

சர்க்கரை நோயை வரவேற்கும் முக்கியப் பதாகைஉடல் பருமன்எப்போது நம் உணவுத் தட்டில் வெள்ளை வெளேர் உணவுகள் (அரிசி, மைதா, சர்க்கரை) அடிக்கடி ஆக்கிரமிக்கிறதோ அல்லது துரித உணவுகள் உட்கார்ந்துவிடுகிறதோ அப்போது உடல் பருமன் நமக்கு 'நிரந்தர விருந்தாளி'யாகிவிடுகிறது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கிறதுஅதை ஈடு கட்ட கணையம்  இரவும் பகலுமாகப் பாடுபடுகிறது. 100 மீட்டர் ஓட்டத்துக்குப் பயிற்சி பெற்றவரை 400 மீட்டர் ஓட்டத்துக்கு ஓடச்சொன்னால் சீக்கிரம் களைத்துப்போவதுபோல் கணையமும் களைத்துப்போக, இன்சுலின் சுரப்பது குறைந்துபோகிறது. சர்க்கரை நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது.

இன்சுலினுக்கு எதிர்ப்பு!

அடுத்த கொடுமை இது. உடலில் கொழுப்பு சேரச் சேரதிசுக்களில் உள்ள செல்கள் இன்சுலினை எதிர்க்கின்றன'உள்ளே நுழையாதே!' எனத் தடுக்கின்றன. கையில் சாவி இருந்தாலும் சமயங்களில் அது பூட்டைத் திறக்க சண்டித்தனம் செய்வதுபோல சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும்அது சரியாக வேலை செய்யாதுகாரணம்இவர்களுடைய செல்களில் 'இன்சுலின் ஏற்பான்கள்குறைவாக இருக்கும்இதனால்செல்களுக்குள் சர்க்கரை நுழைய முடியாமல் தவிக்கும். வீடு பூட்டியிருந்தால் திண்ணையில்தானே காத்திருக்க வேண்டும். அதுபோல் ரத்தச் சர்க்கரைக்கு செல்களில் இடமில்லையென்றால் அது ரத்தத்தில் தேங்கி நிற்கும்அப்போது சர்க்கரை நோய் முகம்காட்டும்இதை 'இன்சுலின் எதிர்ப்புணர்வு(Insulin Resistance) என்கிறோம்.

சொந்தமாகும் சோம்பல்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை அனைவருக்கும் உடலுழைப்பு இருந்தது. அவர்கள் சாப்பிட்டது பெரும்பாலும் அரிசி உள்ளிட்ட தானிய உணவுகள்தான் என்றாலும், உடலில் கூடும் சர்க்கரையைச் செலவழிக்க உடலுழைப்பு பெரிதும் உதவியது. இப்போது காட்சி மாறிவிட்டது. இன்றைக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகள் பலவும் நம்மைக் கொஞ்சம்கூட அசையவிடாமல் பார்த்துக்கொள்வதால் உடலுழைப்பு குறைந்துவிட்டது. உடற்பயிற்சி இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்தே வேலை செய்வது அதிகமாகிவிட்டது. சோம்பல் நம்மை சொந்தம் கொண்டாடுகிறது. விளைவு, உடலுக்குள் நுழையும் சர்க்கரை செலவாக வழியில்லாமல் ரத்தத்தில் தங்கிவிடுகிறது. இப்படிச் சுமையாகிப்போன சர்க்கரையை இறக்க கணையம் இரண்டு மடங்கு இன்சுலினைச் சுரக்கிறது. பசுமைப் புரட்சியால் மண் மலடானதுபோல் பயிற்சிப் பசியால் கணையத்தில் இன்சுலின் சீக்கிரத்தில் காலியாகிவிடுவதால் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.

என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

ரத்தத்தில் சர்க்கரை இயல்பு அளவு கடந்தால் கண்கள், கால்கள், ரத்தக்குழாய்கள், சிறுநீரகம், இதயம், மூளை, நரம்பு போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். அப்போது பார்வை இழப்பு, கால் இழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு, நரம்பு பாதிப்பு, பக்கவாதம், கால் எரிச்சல் போன்றவை ஏற்படும். அதேநேரத்தில் ஒரு நல்ல செய்தியும் உண்டு. சர்க்கரை நோயின் ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அதிலிருந்து தப்பிக்கவும் வழியுண்டு. கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன அரங்கநாதன் சர்க்கரை நோயைத் தடுக்க என்ன செய்கிறார்? அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

பெட்டிச் செய்தி:      

உங்களுக்கு சர்க்கரை நோய்  இருக்கிறதா?

ரத்தச் சர்க்கரை அளவு - வெறும் வயிற்றில்:

80 – 110 மி.கி./டெ.லி. சர்க்கரை நோய் இல்லை.

111 – 125 மி.கி./டெ.லி. சர்க்கரை நோய் வரக்கூடிய நிலைமை.

125 மி.கி./டெ.லி.க்கு மேல் சர்க்கரை நோய் இருக்கிறது.

ரத்தச் சர்க்கரை அளவு - உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து:

120 – 140 மி.கி./டெ.லி. சர்க்கரை நோய் இல்லை.

141 – 200 மி.கி./டெ.லி. சர்க்கரை நோய் வரக்கூடிய நிலைமை.

200 மி.கி./டெ.லி.க்கு மேல் சர்க்கரை நோய் இருக்கிறது.

ஹெச்பிஏ1சி (HbA1C) பரிசோதனை அளவு:

        இது மூன்று மாதம் சராசரி ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிவிக்கும் பரிசோதனை. இது 6.5%க்குக் கீழ் இருக்க வேண்டும். இந்த அளவு தாண்டினால் ‘சர்க்கரை நோயாளி’ என்று முத்திரை குத்தப்படும்.

06. 01. 2019 காமதேனு இதழ்===============================================================================================================

டாக்டர் குகணேசன், MBBS.

நான் யார்?

பொதுநல மருத்துவன்மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவன் (1975 – 1981). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ‘கணேஷ் மருத்துவமனையை நடத்தி வருகிறேன்மருத்துவப் பணியில் 40 வருட அனுபவம் கொண்டவன்.

மருத்துவ அறிவியல் எழுத்தாளர்இதுவரை 50 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறேன்தினமணிஇந்து தமிழ் திசைதினமலர்குமுதம்குங்குமம்கல்கிஹெல்த் & பியூட்டிடாக்டர் விகடன்குங்குமம் டாக்டர்குமுதம் ஹெல்த்கோகுலம் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள்வாரமாத இதழ்களில் உடல் நலன் சார்ந்த அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்பாமர மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் மருத்துவக் கட்டுரைகளை எழுதுவது என் தனிச் சிறப்புதமிழ் மொழி வளர்ச்சிக்கான பல ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்.

மத்திய அரசின் உயரிய அறிவியல் விருதான ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தொடர்பியல் விருது’, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ‘மகாகவி பாரதியார் அறிவியல் தமிழ் விருது’, சென்னைஎஸ்.ஆர்.எம்பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப்பேராய விருது’, சென்னைமுத்து பார்மஸியின் ‘சாதனையாளர் விருது’,  இந்திய மருத்துவச் சங்கத்தின் ‘தலைசிறந்த மருத்துவர் விருது’, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளேன்பாரதிப் பணிச் செல்வர்மருத்துவ இலக்கிய மாமணி எனும் இரண்டு பட்டங்களையும் பெற்றுள்ளேன்.

குடும்பம்: மனைவி திருமதி லலிதா கணேசன்மகன் டாக்டர் திவாகர், MBBS., DNB.,  தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் (Intensivist), (ஜெம் மருத்துவமனைகோவை). மருமகள் டாக்டர் பௌசியா, MD., குழந்தைகள் சிறப்பு மருத்துவர். பேத்தி தியாமகள் டாக்டர் ஆர்த்தி, MBBS.,

முகவரி:

·         Dr. G. Ganesan, MBBS.,                Ganesh Hospital,

·         53/19-A, Angiah Raja Street,       RAJAPALAYAM-626 117

·         VIRUDHUNAGAR – DT                   Mobile: 99524 34190      

·         e-mail: gganesan95@gmail.com

·         வலை தளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com/

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?