மார்பகப் புற்றுநோய் : பெண்களே உஷார்!

  

 

அக்டோபர் மாதம் – மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்!

 


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

                                       மகளிர் நலம்


மார்பகப் புற்றுநோய்! பெண்களே உஷார்!

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடம் வகிக்கிறது. போன தலைமுறை வரை இது 50 வயதுக்குப் பிறகே வந்துகொண்டிருந்தது. இப்போது 30 வயதிலும் வருகிறது. இந்தப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதுதான் கவலை தரும் செய்தி.

மார்பகப் புற்றுநோயைப் பொறுத்த அளவில் ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டால், 100 % குணமாகும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு என் அம்மாவே ஓர் உதாரணம். 1980-ல் நான் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் அம்மாவுக்கு வயது 55. அவருக்கு அப்போது ஒரு பக்க மார்புக் காம்பில் நீர்க்கசிவு ஏற்பட்டதைச் சொன்னபோது உடனடியாக நான் படித்துக்கொண்டிருந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன்.

அப்போதெல்லாம் இப்போதுள்ளபடி மேம்பட்ட பரிசோதனைகளோ, சிகிச்சைமுறைகளோ கிடையாது. நெஞ்சு எக்ஸ்-ரே மற்றும் திசு ஆய்வுப் பரிசோதனை மட்டும்தான் இருந்தன. அம்மாவைப் பரிசோதித்தபோது மார்புக் காம்பில் மட்டும்தான் புற்றுநோய் இருந்தது. வேறெங்கும் அது பரவியிருக்கவில்லை. என் பேராசிரியர் டி. எஸ். சுப்பிரமணியம் என் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு பக்க மார்பகத்தையும் அக்குளில் இருந்த நிணநீர்க்கட்டிகளையும் அகற்றிவிட்டார். அத்தோடு சரி. வேறு சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார். முறையான தொடர் கவனிப்பு போதும் என்றார். என் அம்மா 85 வயது வரை நலமுடன் வாழ்ந்தார்கள்.

தயக்கம் வேண்டாம்!

மார்பகத்தில் ஏற்படும் சில கட்டிகள் நாட்படும்போது புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். தங்கள் வயதுக்கு ஏற்ப ‘ஸ்க்ரீனிங்’ எனும் நோய் முன்னறிதல் பரிசோதனைகளைச் செய்துகொள்ளும் வழக்கம் நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லை என்பதாலும், மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் காட்டுவதாலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கவனிக்கத் தவறி விடுகின்றனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் படித்தவர்களுக்கே முழுவதுமாக இல்லை என்பதாலும் அறியாமையினாலும் இந்தியாவில் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய் மூன்றாம் நிலையில் இருக்கும்போதுதான் சிகிச்சைக்கே வருகின்றனர். இதனால்தான் இந்தப் புற்றுநோயை முழுவதுமாகக் குணபடுத்துவது சிரமம் ஆகிறது.

அறிகுறிகள் என்ன?

பெண்களுக்கு மார்பில் கட்டி, மார்புக் காம்பில் நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்புக் காம்பு உள்வாங்குதல், அக்குளில் கட்டி, கை முழுவதும் வீங்குவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது உஷாராகிவிட வேண்டும். இவர்கள் மருத்துவ ஆலோசனைக்கும் பரிசோதனைக்கும் தயாராகிவிட வேண்டும்.

காரணங்கள் எவை?

1. மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று உறுதியாக எதையும் கூறமுடியவில்லை. ஆனாலும் சில காரணிகள் இந்தப் புற்றுநோய் வருவதைத் தூண்டுகின்றன என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

2. வயது 45 – 70. இது பொதுவானது. இப்போது 30 வயது பெண்களும் கவனமாக இருக்க வேண்டும்.

3. உடற்பருமன். உடற்பயிற்சி இல்லாதது.

4. வம்சாவளியில் மார்பகப் புற்றுநோய் அல்லது சினைப்பைப் புற்றுநோய் வந்திருந்தால் அந்த வாரிசுகளுக்கு மார்பகத்தில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

5. 11 வயதுக்குள் பெண்கள் பருவமடைவது.

6. இறுதி மாதவிலக்கு (மெனோபாஸ்) நிற்பது தாமதம் ஆவது.

7. பதின் வயதில் ஹார்மோன் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது.

8. முதல் குழந்தையை 30 வயதுக்கு மேல் பெற்றுக்கொள்வது.

9. குழந்தைக்குத் தாய்ப்பால் தராமல் இருப்பது.

10. மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வது.

11. குழந்தைப்பேறு இல்லாதது.

12. புகைபிடிப்பது; மது அருந்துவது.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

மார்பக சுய பரிசோதனை: 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தாங்களாகவே மார்பகங்களை அழுத்தமாகத் தொட்டு மாதம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளலாம். மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள், கண்ணாடி முன் நின்று, இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்த்தும், நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அப்போது ஏதேனும் வலி இல்லாத கட்டி, வீக்கம், மார்புக் காம்பில் மாறுதல் போன்றவை தெரிந்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். பிரச்சினை இல்லாதபட்சத்தில் இவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் நேரடியாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

40 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மார்பக சுய பரிசோதனையோடு வருடத்துக்கு ஒருமறை மருத்துவப் பரிசோதனை மற்றும் மெமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவர்கள் 65 வயதுவரை இதைத் தொடரலாம்.

மெமோகிராம்: எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது போன்ற எளிய பரிசோதனைதான் இது. பெண்கள் 40 வயதுக்கு மேல் இதை மேற்கொண்டுவிடுவது நல்லது; வருடத்துக்கு ஒருமுறை இது தேவைப்படும்; சந்தேகம் வலுத்தால் வருடத்துக்கு இரண்டுமுறைகூட அவசியப்படலாம்.  

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை: மார்பகத்தை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை முன்னரே அறியலாம். வயிற்றுக்குள் புற்றுநோய் பரவியுள்ளதா என்பதையும் இதில் அறியலாம்.

ரத்தப் பரிசோதனைகள்: மார்பகப் புற்றுநோயை முன்னரே அறிய BRCA1/BRCA2 ரத்தப் பரிசோதனைகள் உதவுகின்றன. சில ஹார்மோன் பரிசோதனைகளும் உள்ளன.

மார்பக எம்.ஆர்.ஐ. பரிசோதனை: வம்சாவளியில் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் வாரிசுகளுக்கும், ரத்தப் பரிசோதனைகளில் புற்றுநோய்க்கு வாய்ப்புள்ளது எனத் தெரியும் பெண்களுக்கும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திசு ஆய்வுப் பரிசோதனை:

மார்பகத்தில் ஏற்பட்டுள்ள கட்டி புற்றுநோயைச் சார்ந்ததா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் திசு ஆய்வுப் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் பல விதம் உண்டு. திசுவை ஊசிமூலம் உறிஞ்சி எடுத்துப் பரிசோதிப்பது (FNAC). அடுத்தது, ‘ட்ரூகட் பயாப்சி’ (True-cut biopsy). சிறு கருவி கொண்டு சிறிதளவு திசுவை மட்டும் வெட்டியெடுத்துப் பரிசோதிக்கும் முறை இது. மார்பகப் புற்றுநோயை உறுதிப்படுத்தப் பெரிதும் உதவும் வலி இல்லாத பரிசோதனை இது. இதில் சந்தேகம் வரும்போது மொத்தத் திசுவையும் அகற்றி (Total biopsy) பரிசோதிப்பதும் உண்டு.  

‘பெட்-சி.டி. ஸ்கேன்’ பரிசோதனை:

புற்றுநோய் மார்பகத்தில் மட்டுமே உள்ளதா, உடலில் வேறு எங்காவது பரவியுள்ளதா என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கும் நவீன பரிசோதனை இது. தேவைப்பட்டால் மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.

புற்றுநோய் நிலைகள்:

பூஜ்ய நிலை: இதில் மார்பகத்தில் பால் நாளத்தில் அல்லது பால் சுரப்பியில் புற்றுநோய் தொடங்கும். மார்பகத்தில் மிகச் சிறிய கட்டியாக இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. ஏற்கனவே சொன்ன பரிசோதனைகளில் மட்டுமே தெரியும்.

முதல் நிலை: மார்பகக் கட்டியின் அளவு 2 செ.மீ.க்கும் குறைவாக இருந்து, அக்குளுக்கு அது பரவாத நிலை இது.

இரண்டாம் நிலை: கட்டியின் அளவு 2 - 5 செ.மீ.க்குள் இருந்து, அக்குளில் 2 – 3 நிணநீர்ச்சுரப்பிகளில் மட்டும் பரவியிருக்கும் நிலை இது.

மூன்றாம் நிலை: கட்டியின் அளவு 5 செ.மீ.க்கும் அதிகமாக இருந்து, அக்குளில் பல நிணநீர்ச்சுரப்பிகளில் பரவியிருக்கும் நிலை இது.

நான்காம் நிலை: மார்பகக் கட்டி மார்பில் தசையோடு ஒட்டியிருக்கும். இப்போது இது அக்குள் மட்டுமல்லாமல் நுரையீரல், கல்லீரல், மூளை, எலும்பு என உடலில் பல பகுதிகளுக்குப் பரவியிருக்கும்.

சிகிச்சை முறைகள்:

திசுஆய்வுப் பரிசோதனையில் மார்பகப் புற்றுநோய் வகை மற்றும் நோய்நிலையைத் தெரிந்துகொண்டு, நோயாளியின் பொது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மருத்துவர், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர், கதிர்வீச்சு மருத்துவர் ஆகிய மூவரும் கலந்தாலோசித்து சிகிச்சையை முடிவு செய்கின்றனர்.

அறுவை சிகிச்சை:  பூஜ்ய நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமில்லை.கட்டியை மட்டும் அகற்றினால் போதும். மற்ற நிலைகளுக்குத்தான் முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டும். ஆனால், இரண்டிலுமே அக்குளில் உள்ள நிணநீர்க்கட்டிகள் அகற்றப்படும். சிலருக்கு மருந்து சிகிச்சை கொடுத்து கட்டியின் அளவைச் சுருங்க வைத்த பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும் உண்டு. தேவைப்படுபவர்களுக்கு மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு ‘மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை’ செய்யப்படுவதும் உண்டு.

மருந்து சிகிச்சை: அறுவை சிகிச்சை புண் ஆறியவுடனே இதைத் தொடங்கிவிட வேண்டும். சில வகை புற்றுநோய்க்கு இது அறுவை சிகிச்சைக்கு முன்னரும் கொடுக்கப்படலாம். புற்று செல்களை அழிக்கும் திறனுள்ள கூட்டு மருந்துகள் இவை. இலக்கு சார்ந்த மருந்துகள் இப்போது உள்ளன. இவற்றை குளுக்கோஸ் அல்லது சலைனில் கலந்து ரத்தத்தில் நேரடியாகச் செலுத்தப்படுவது வழக்கம். பொதுவாக, 3 வாரங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 6 சுழற்சிகள் கொடுப்பார்கள்.

இந்த மருந்துகளுக்கு முடி உதிர்வது, குமட்டல், வாந்தி, வாய்ப்புண், ரத்த அணுக்கள் குறைவது போன்ற பக்க விளைவுகள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு முறையும் நோயாளியின் ரத்தத்தில் அணுக்களின் அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்த்துத்தான் மறுபடியும் மருந்து செலுத்துவார்கள். இப்போதெல்லாம் இந்த பக்க விளைவுகளைத் தீர்க்க நல்ல மருந்துகள் உள்ளன. ஆகவே, மருந்து சிகிச்சைக்கு பயம் தேவையில்லை.

கதிர்வீச்சு சிகிச்சை: மார்பகப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை கொடுத்த பிறகு கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படுவதுதான் வழக்கம். விதிவிலக்காக, சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னரோ மருந்து சிகிச்சைக்கு முன்னரோ இதைத் தரலாம். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஒருமுறை வீதம் வாரத்துக்கு 5 நாட்களுக்கு என 25 நாட்களுக்குக் கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படுவது வழக்கம். மருந்து சிகிச்சை முடிந்த 2 வாரங்கள் கழித்து இது தரப்படும்.

ஹார்மோன் சிகிச்சை: ரத்தத்தில் ஹார்மோன் பரிசோதனை முடிவைப் பொறுத்து இது மேற்கொள்ளப்படுகிறது. இது மாத்திரை மற்றும் ஊசிகள் மூலம் கொடுக்கப்படும் சிகிச்சை. மார்பகப் புற்றுநோய்க்கு 5 வருடங்கள் தொடர்ந்து இது கொடுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை மார்பகப் புற்றுநோய் வந்தவருக்கு மறுபடியும் புற்றுநோய் வந்தால் அது மார்பகத்தில்தான் வரும் என்று சொல்லமுடியாது. வேறு எங்காவது வரலாம். ஆகவே, உடலில் எங்காவது தொடர்ந்து வலியோ, சிரமமோ இருந்தால் உடனே பரிசோதித்துக்கொள்வது நல்லது.

மார்பகப் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சைகள் வெற்றி பெறுவதற்கு நோயாளியின் முழுமையான ஒத்துழைப்பும் மன உறுதியும் முக்கியம். பின் கவனிப்பும் (Follow up) தொடர் கவனிப்பும் அதி முக்கியம். குறைந்தது 5 வருடங்களுக்காவது மருத்துவர் கூறும் பரிசோதனைகளைச் செய்துகொண்டால், மார்பகப் புற்றுநோய் மறுபடியும் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

பெட்டிச் செய்தி - 1

        BRCA1/BRCA2 பரிசோதனைகள் யாருக்குத் தேவை?

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே அறியும் ரத்தப் பரிசோதனை இது. என்றாலும், இது எல்லோருக்கும் தேவையில்லை. பொதுவாக, பெண்களுக்கு 1000ல் ஒருவருக்கே BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்களில் குறைபாடு இருக்கும். இப்படிக் குறைபாடு இருக்கிறவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது எனும் அறிவியல் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது. குடும்ப வழியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் அல்லது சினைப்பைப் புற்றுநோய் வந்திருந்தால் அவருக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மார்பகத்தில் புற்றுக்கட்டி எதுவும் இல்லாமல் BRCA1/BRCA2 மரபணுக்களில் மட்டும் குறைபாடு இருப்பதாகத் தெரிந்தால், மூன்றுவித ஆலோசனைகள் வழங்கப்படும்.

முதலாவதாக, அறுவை சிகிச்சை இல்லாமல் மாதம் ஒருமுறை மார்பக சுய பரிசோதனை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரின் நேரடியாகப் பரிசோதனை, வருடம் ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை/அல்ட்ரா சவுண்ட்/எம்.ஆர்.ஐ. ஸ்கேன்/சினைப்பைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கட்டி கண்டுபிடிக்கப்படும்போது அதற்குண்டான சிகிச்சை பரிந்துரை செய்யப்படும். இந்த ‘கேன்சர் ஸ்க்ரீனிங்’ முறைகளை 20-30 வயதுக்குள் தொடங்கிவிட வேண்டும் என்பது முக்கியம்.

அடுத்ததாக, மேற்சொன்ன ‘கேன்சர் ஸ்க்ரீனிங்’ முறைகளோடு ஹார்மோன் மாத்திரை ஒன்று தரப்படும்.  அல்லது  அமெரிக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் முன்னெச்செரிக்கையாக இருபக்க மார்பகங்களையும் அறுவை சிகிச்சையில் அகற்றிவிட்டு, மார்பகச் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.

பொதுவாக, ‘கேன்சர் ஸ்க்ரீனிங்’ முடிவுகளோடு வயது, திருமணம், குடும்ப வாழ்க்கை, குழந்தைப்பேறு குடும்பத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ள விவரங்கள் போன்ற பலவற்றை பரிசீலித்து சிகிச்சை முறைகள் பரிந்துரை செய்யப்படும்.

பெட்டிச் செய்தி - 2

  நடிகை கௌதமி -  புற்றுநோயை வென்றவர்!




பிரபலமான தமிழ் நடிகை கௌதமிக்கு 35 வயதில் மார்பகத்தில் புற்றுநோய் வந்தது. ஆரம்பத்திலேயே அதைக் கவனித்துவிட்டார். தான் தொடர்ந்து மேற்கொண்ட மார்பக சுய பரிசோதனை மற்றும் `மெமோகிராம்' பரிசோதனையால்தான், தனக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதை வெல்லவும் முடிந்தது என்று கூறியுள்ளது மார்பக சுய பரிசோதனை மற்றும் மெமோகிராமின் அவசியத்தை நன்கு உணர்த்துகிறது.  அவர் அறுவை சிகிச்சை, ‘கீமோ’ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் போராடி புற்றுநோயை வென்று விட்டார்.

தற்போது அவர் புற்றுநோய் உள்ளவர்களுக்கு உதவும் “லைஃப் அகைன்” எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும்போது அதை முழுவதுமாகக் குணப்படுத்த எல்லா வசதிகளும் தமிழகத்தில் தற்போது உள்ளது என்பதாலும், தமிழக கிராமங்களில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் இல்லை என்பதாலும் கிராமங்களில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புற்றுநோய் வந்ததும் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. அதற்குப் பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. தன்னம்பிக்கை, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மனவலிமை ஆகியவற்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதே லைஃப் அகைன் நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

நடிகை கௌதமி தற்போது அனைத்து இடங்களிலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வாய்வழி பிரச்சாரமாக மட்டுமே செய்து வருகிறார். எதிர்காலத்தில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில், பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகப் பாடிய `ஐ டச் மை செல்ஃப்...' என்னும் பாப் வீடியோவும் மார்பக சுய பரிசோதனையின் அவசியத்தை, உலக அளவில் பெண்களிடையே வலியுறுத்துகிறது.

குங்குமம் டாக்டர் இதழ்

முகவரி:

Dr. G. Ganesan, MBBS.,           Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,        RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT               Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

வலைதளம்: https://drkuganesanmedicalarticle.blogspot.com

 

 

 

Comments

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?