மூட்டுவலிக்கு முகாந்திரம்!


 மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்! இன்று உலக மூட்டு வலி தினம் | Dinamalar

 






 

       

 

 

 

         டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.

 

 


இந்தியாவில் தொற்றாநோய்க் கூட்டத்தில் இணைந்துள்ள மற்றொரு நோய், மூட்டுவலி. “உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல… எழுந்தா உட்கார முடியல…சப்பணம் போடமுடியல… மாடிப்படியில் ஏற முடியல… மூட்டுவலி ஆளைக் கொல்லுது” என்று வேதனையுடன் முணுமுணுப்போர் முப்பதிலிருந்து நாற்பது கோடிப் பேர். இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களிடம்தான் முணுமுணுப்பு அதிகம். அதிலும் நம் தாத்தா காலத்தில் 60 வயதில் தொடங்கிய மூட்டுவலி தற்போது 30 வயதில் தொல்லை செய்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்; நவீன வாழ்வியல் தந்திருக்கும் ஓர் அச்சம் என்றும் இதைச் சொல்லலாம்.

     மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான். என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பொதுவாக ‘மூட்டுவலி’ (Osteoarthritis) என்கிறோம். காலில் உள்ள முக்கியமான ஜங்ஷன் முழங்கால் மூட்டு. நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது, உட்காரும்போது, எழுந்திருக்கும்போது, நடனம் ஆடும்போது என சகல அசைவுகளின்போதும் உடல் எடையைத் தாங்கும் முதன்மையான மூட்டு இது.

மற்ற மூட்டுகளோடு ஒப்பிடும்போது இதன் உள்ளமைப்பும் வித்தியாசமாகவே இருக்கிறது. முக்கியமாக, உடலின் எடையைத் தாங்கிக்கொள்வதற்காகவே மூட்டைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் இணைப்பு நாண்களும், ‘மெனிஸ்கஸ்’ எனும் குஷன்களும், மெழுகுபோன்ற மசகுகளும் உள்ளன. ஆனால், இவற்றின் முக்கியத்துவம் புரியாமல் எப்படியெல்லாம் மூட்டுக்கு இடைஞ்சல் செய்கிறோம்!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

“பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்”

வாழ்வியல் ‘வைத்தியர்’ திருவள்ளுவர் “அதிக சுமை ஆகாது” என்பதை இந்தக் குறளில் அழகாகச் சொல்லியிருக்கிறார். படித்து என்ன பிரயோஜனம்? இன்றைய வாழ்க்கைமுறையில் நம் வசதிக்கு அதை மறந்துவிட்டோம்; பாரம்பரிய உணவுகளைப் புறந்தள்ளினோம்; அந்நிய உணவுகளில் ஆர்வம் செலுத்தினோம்; உண்ணும் உணவில் சுமை கூட்டினோம்; ஊற்றும் எண்ணெயில் சுவை தேடினோம்; உடலின் உழைப்புக்குக் குழி தோண்டினோம்; உடற்பயிற்சிகளை ஓரங்கட்டினோம். என்ன பலன் அடைந்தோம்? இடுப்பிலும் வயிற்றிலும் ‘பாரம்’ சுமந்ததுதான் மிச்சம்! அது முதுகுவலி, மூட்டுவலி என்று வேதனைகளைக் கொடுத்ததுதான் சொச்சம்!

மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் மூட்டு எலும்பு ஜங்சனில் இடம் குறைவது என்கிறது அலோபதி மருத்துவம். மூட்டில் எலும்புகள் ஒன்றுக்கொன்று உரசி, வலி தொடங்குவது முதுமையின் அடையாளம் எனச் சொன்னது அந்தக்கால மருத்துவம். “இப்போது காலமும் மாறிவிட்டது; காரணமும் மாறிவிட்டது. இளமையில் உடற்பருமன் உண்டாவதுதான் மூட்டுவலிக்கு முதல் முகாந்திரம்” என்கிறது இந்தக்கால மருத்துவம்.

மூட்டில் வலி வருவது எப்படி?

முழங்கால் மூட்டில் குருத்தெலும்புப் பகுதியில் ‘சைனோவியம்’ என்னும் சவ்வு இருக்கிறது. மூட்டு அசையும்போது அதிர்வுகளைத் தாங்கவும், இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதைத் தடுக்கவும் இது உதவுகிறது. இதில் ஒரு திரவம் சுரக்கிறது. சைக்கிள் சக்கரத்துக்கு மசகு போட்டால் அது சுழலும்போது ‘க்ரீச்’ சத்தம் கேட்காதல்லவா? அதுமாதிரி இந்த சைனோவியல் திரவம்தான் மூட்டுக்கு மசகு தடவுகிறது; அப்போது அதன் அசைவு எளிதாகிறது; அன்ன நடை, அழகு நடை, பூனை நடை….எல்லாமே நமக்குச் சாத்தியமாகிறது.

     சைனோவியல் சவ்வுக்கு ஆகாத ‘விருந்தாளி’ உடற்பருமன். நம் இடுப்பளவு கூடக்கூட இந்த சவ்வுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு, உடலில் ஒரு கிலோ எடை கூடினால் அதைவிட நான்கு மடங்கு எடை இந்த சவ்வை அழுத்துகிறது. ஆறு மாடிக்கு அடித்தளம் அமைத்துவிட்டு எட்டு மாடி வீடு கட்டினால் விரிசல் விழுவது சகஜம்தானே! அதுபோல் மூட்டுச் சவ்வில் உண்டாகும் அதீத அழுத்தத்தால் அது பிளவுபடுகிறது. அப்போது அடிவயிற்றுத் தொப்பையிலிருந்து ‘சைட்டோகைன்’ என்னும் ரசாயனம் உற்பத்தியாகிறது. அது மூட்டுக்கு வந்து, பிளவுபட்ட சவ்வில் ஒட்டிக்கொள்கிறது. மரத்தை அரிக்கும் கரையான்போல் இது குருத்தெலும்பை அரித்துவிடுகிறது. இதனால் சவ்வு சிதைவடைந்து திரவச்சுரப்பு குறைந்து போகிறது. போகப்போக மூட்டில் இடைவெளியே இல்லாமல் போகிறது. இதனால் தொடை எலும்பும் கால் எலும்பும் நெருங்கி வந்து ‘முத்தம்’ கொடுப்பது வழக்கமாகிறது.

இந்தக் காரணங்களால் பாதிக்கப்பட்ட முழங்கால் வீங்கிவிடும். வலி கொல்லும். நம் இஷ்டத்துக்குக் காலை நீட்டவோ மடக்கவோ முடியாமல் போகும். பஸ் பிடிக்க ஓடுவதிலிருந்து மாடிப்படிகளில் ஏறுவதுவரை நித்தியக் கடமைகளைச் செய்வது சாகச சங்கதிகளாகிவிடும். அப்போது நாம் என்ன செய்வோம்? எலும்பு மருத்துவரைத் தேடுவோர் குறைச்சல். உடனடி நிவாரணத்துக்குக் கூகுளில் தேடுவோம். அமேசானில் ஆர்டர் கொடுப்போம். அல்லது நாட்டு வைத்தியரை நாடுவோம். புத்தூர் கட்டு போடுவோம். போதாக்குறைக்கு ஊடகங்கள் சிபாரிசு செய்யும் இயற்கைத் தைலங்களைத் தேய்ப்பது, புறா ரத்தம் பூசுவது எனப் பல அசட்டுத்தனங்களை செய்து பார்ப்போம். ஆனால், உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டும் வழி தேட மாட்டோம்.

பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா? || wearing high heels danger

 

ஹை ஹீல் காலணி கவனம்!

அமுதா இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. வயது 30. கணவருக்குத் துபாயில் வேலை. அவர் தொலைக்காட்சியிலும், செல்போனிலும் பகல் பொழுதைத் தொலைக்கும் நவீனப்பெண்; துரித உணவுகளுக்குத் தீவிர அடிமை; வீட்டில் தனிமை கொல்லும்போது நொறுக்குத்தீனிகளுக்கு அதிக இடம் கொடுப்பார்; திருமணத்தின்போது ‘தம்மன்னா’போல் இருந்தவர் அம்மா ஆனபிறகு ‘நமீதா’போல் ஆகிவிட்டார். அது மட்டுமல்ல, அவர் வளர்த்தியில் கொஞ்சம் குட்டை; அதனால் ஹை ஹீல் காலணிதான் அணிவார்.

அவர் ‘மூட்டுவலி’ என்று என்னிடம் வரும்போதெல்லாம் உடம்பைக் குறைக்கச் சொல்வேன். ஹை ஹீல் காலணி ஆகாது என்பேன். “பாதம் ஒரு பதமான மேடை. அதில் தட்டையான காலணிதான் அணிய வேண்டும். சாய்ந்த மேடையில் நின்றுகொண்டு பேசுவது ஒரு பேச்சாளருக்கு எத்தனை சிரமமோ, அதைவிட பல மடங்கு சிரமம் ஹை ஹீல் செருப்பு போடும்போது முழங்காலுக்கு ஏற்படும். அதனாலும் மூட்டுவலி வரும்’ என்று ஒரு பாடமே நடத்துவேன். ஆனாலும் அதைக் காதில் வாங்க மாட்டார். 

நம் பெண்களிடம் ஒரு தவறான கருத்து உண்டு. மூட்டுவலி என்றாலே அதை ‘நீர்ப்பிணைப்பு’ எனும் ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவார்கள். ‘தண்ணீர்ச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தால்  போதும்; மூட்டுவலி வராது!’ என்று சமாதானம் செய்துகொள்வார்கள். அமுதாவும் அப்படித்தான். ஆனாலும் இரண்டாவது கருத்தில் அவருக்கு உடன்பாடில்லை; எனவே, உணவு விஷயத்தில் அக்கறையில்லை.

அமுதா ஆகவேண்டிய காரியத்தைக் கவனிக்காமல், அடிக்கடி வலி ஊசிகளைப் போட்டுக் கொண்டார். ஆயுர்வேத மசாஜ், அக்குபங்சர், பிசியோதெரபி என எல்லாவிதப் பகீரதப் பிரயத்தனங்களும்  செய்து பார்த்தார். ஒன்றும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், ‘ஆபரேஷன் செய்து செயற்கை மூட்டுதான் பொருத்த வேண்டும்’ என்று எலும்பு மருத்துவர் சொன்னபோது பயந்துபோனார். என்னிடம் ஆபரேஷனைத் தவிர்க்க யோசனை கேட்டார்.

நான் “கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது! உன் மூட்டுப் பிரச்சினையைச் சரிசெய்ய ஆபரேஷன்தான் ஒரே வழி. அதற்குப் பிறகும் உடற்பருமன் இருந்தால், மூட்டுவலி விடை பெறாது. ஆகவே, எடையைக் குறைக்க முதலில் தயாராக வேண்டும்” என்று ஆலோசனை சொன்னேன்.

இப்படி, தீப்பொறியைப் பொசுக்கச் சோம்பல்பட்டு தீப்பிழம்பை அணைக்கத் தண்ணீர் தேடும் அமுதாக்கள்தான் இங்கே அதிகம். அதனால்தான் வருடாவருடம் சுமார் ஒன்றரை கோடிப் பேர் மூட்டுவலி நோய்ப் பட்டியலில் புதிதாக வந்து சேருகிறார்கள்.

சரி…மூட்டுவலிக்கு அடுத்த முகாந்திரம் எது? அது அடுத்த கட்டுரையில்.

07.10. 2018 காமதேனு இதழுக்குரியது.

 

 இது இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக .......... - தமிழ் ஆரோக்கியம்

 

 

பெட்டிச் செய்தி  

   

வேண்டாமே!

மோட்டார் சைக்கிளின் பின்புறம் பெரிய மூட்டையை ஏற்றிக்கொண்டு செல்பவர்கள், பெரும்பாலும் முழங்கால்களை வெளிப்புறமாக நீட்டிக்கொண்டுதான் செல்கிறார்கள். வாகனத்தைச் சமநிலை செய்ய எளிதாக இருக்கும் என்று அவர்கள் அப்படிச் செய்தாலும், இதில் முழங்காலில் அடிபட்டுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே, வாகனம் ஓட்டும்போதும் ‘அதிக சுமை ஆகாது’ என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்!

அடுத்து, முழங்காலில் அடிபட்டு வீக்கமோ, ரத்த உறைவோ ஏற்பட்டால், பொதுவாகப் பலரும் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறார்கள். இது தவறு. ஐஸ் ஒத்தடம்தான் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டிகளைப் பிளாஸ்டிக் பையில் அல்லது ஒரு துணியில் போட்டு மூடி, அதை அடிபட்ட இடத்தின்மீது வைத்து எடுக்க வேண்டும். சிலர் ஐஸ் கட்டிகளை அந்த இடத்தில் நேரடியாக வைத்துவிடுவார்கள். இது வம்பை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாகும். அப்படிச் செய்ய வேண்டாம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Dr. G. Ganesan, MBBS.,        Ganesh Hospital,

53/19-A, Angiah Raja Street,     RAJAPALAYAM-626 117

VIRUDHUNAGAR – DT                Mobile: 99524 34190      

e-mail: gganesan95@gmail.com

=================================================================================================================

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. சைனோவியல்
    ச வ்வுக்கு ஆகாத விருந்தாளி உடற்பருமன்.
    மேலும் அதீத உடற்பருமனால் தொப்பபையிலிருந்து சைட்டோகைன் எனும் ரசாயனம் உற்பத்தியாகி மூட்டுக்கு வந்து சவ்வில் ஒட்டிக்கொள்கிறது.
    இது குருத்தெலும்பை
    அரித்து விடுகிறது.
    என்பதிலிருந்து உடல் பருமன் மூட்டு வலிக்கு முதல் விரோதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
    என்பதை இக்கட்டுரையை நமக்கு உணர்த்துகிறது.
    உடல் பருமனை குறைத்து மூட்டு வலியை விரட்டுவோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

முதுகு வலிக்குத் தீர்வு எது?