மூட்டுப் பிரச்சினை அறிவது எப்படி?
டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.
மூட்டுவலியில் பல தினுசு உண்டு. பாதிக்கப்படும் திசுவுக்கு எது எதிரியாகிறதோ, அதைப் பொறுத்து அதன் பெயர் மாறும். வயதானதும் எலும்புகளில் அழற்சி உண்டாகி உரசத்தொடங்கும்போது ஏற்படும் மூட்டுவலிக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்’ (Osteo arthritis) என்று பெயர். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது வரும் மூட்டுவலி ‘கவுட் ஆர்த்தரைடிஸ்’ (Gout arthritis). அந்நிய உணவுகளின் ஆதிக்கம் பரவலானதும் நம்மை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்ட மூட்டுவலி இது.
இது எதனால் வருகிறது?
நாம் சாப்பிடும் அதிகப்படியான இறைச்சி அயிட்டங்கள்தான் இந்த நோயை வளர்க்கும் உரங்கள். இவற்றிலுள்ள பியூரின் சத்து செரிக்கப்படும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இந்தக் கழிவுப்பொருள் சிறுநீரில் வெளியேறுவது வழக்கம். சமயங்களில், சில நொதிகள் சிதைவதால் இது அதிகமாகச் சுரந்துவிடும். இப்படியும் இருக்கலாம்….. சிறுநீரகப் பாதிப்பின்போது சிறுநீரகம் இதை வெளியேற்ற சண்டித்தனம் செய்யும். இதனால், இந்த அமிலம் ரத்தத்தில் தேங்கும். இது கொஞ்ச நாள் உடலுக்குள் ஊர்வலம் போகும். ஒரு கட்டத்தில் அது போரடித்துவிடும். நிரந்தரமாக ‘கேம்ப்’ போட இடம் தேடும். இதன் முதன்மை கேம்ப் ஆபீஸ் கால் பெருவிரல்கள். மற்ற மூட்டுகள் இதன் சிறு கிளைகள். இந்த மூட்டுகளில் வீக்கம், அழற்சி, வலி தொடங்கும். காலையில் எழுந்ததும் காலை தரையில் வைக்க முடியாது. வலி கொல்லும்!
தனக்குத்தானே சண்டை!
கீல்வாதக் காய்ச்சல் (Rheumatic fever) குழந்தைகளைத் தாக்கும் ஒரு தொற்றுநோய். ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ பாக்டீரியாவின் அட்டகாசத்தால் இது ஏற்படுகிறது. ஆரம்பத்தில் தொண்டை வீங்கி காய்ச்சல் வரும். அப்போதே கவனித்துவிட்டால் குணமடைந்துவிடும். வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று காலம் கடத்தினால் ஆபத்து வரும். எப்படி?
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது பாக்டீரியாவோடு போராடும். அந்த மோதலில்தான் பிரச்சினை வரும். நம்மில் நூற்றுக்கு மூன்று பேருக்கு உடலில் சில பாகங்களில் திசுக்கள் அச்சு அசலாக இந்த பாக்டீரியாவைப் போலவே இருக்கும். அப்போது சினிமாவில் ஒரேமாதிரி வேஷம் போட்ட இரண்டு பேரில் எதிரி யார் எனத் தெரியாமல் வில்லன் குழம்புவதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி குழம்பிப்போகும். இந்த அடையாளக் குழப்பத்தால் பாக்டீரியாவோடு சேர்த்து அந்த உடல் திசுக்களையும் அது அழித்து விடும். இதனால், முழங்கால் மூட்டும் இதய வால்வும்தான் பெரும்பாலும் பாதிக்கப்படும். அப்போது மூட்டு வீங்கி வலிக்கும். இதற்கு ‘ருமட்டாய்டு ஆர்த்தரைடிஸ்’ (Rheumatoid arthritis) என்று பெயர். இதைத் ‘தனக்குத்தானே சண்டை போட வைக்கும் நோய்’ (Auto immune disease) என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சின்ன வயதிலேயே இதைச் ‘சிறை’ பிடித்துவிட்டால் ஆபத்தில்லை. சோம்பல்பட்டால் வளர்ச்சிப் பருவத்திலும் வயோதிகத்திலும் மூட்டு வலியிலிருந்து தப்பிக்க முடியாது.
அடுத்ததாக டான்சில் வீக்கம், பல் சொத்தை என்று உடலில் எங்காவது தொற்று இருந்து கவனிக்கத் தவறினால், அது மூட்டுவலிக்குத் தோரணம் கட்டும். இது ‘எதிர்வினை மூட்டுவலி’ (Reactive arthritis). பத்தாண்டுகளுக்கு முன்னால் நாட்டில் சிக்குன்குனியா பரவியபோது காய்ச்சல் நின்ற பிறகும் ஆயிரக்கணக்கான பேர் மூட்டுவலியால் துன்பப்பட்டதும், வலியைத் தாங்கமுடியாத முதியோர் பலர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.
எலும்பு பலவீனம் ஆவது ஏன்?
நவீன வாழ்க்கையில்
‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) காரணமாக மூட்டுவலி ஏற்படுவது அதிகரித்து
வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், எலும்பு பலவீனம் ஆவதால் வரும் பிரச்சினை
இது. பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் எல்லோருக்கும் எலும்பின் அடர்த்தி
குறையத் தொடங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்
குறைந்து எலும்பு பலவீனம் ஆகும். ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகம்
சாப்பிட்டால் எலும்புகள் உருகிவிடும். உடம்பைக் குறைக்க காலை உணவைத்
தவிர்ப்பது, விரதம் இருப்பது போன்ற தவறான உணவுப்பழக்கங்களை
மேற்கொள்ளும்போது புரதம், கால்சியம் சத்துகள் குறையும். அப்போதும் இதே
நிலைமை ஏற்படும்.
பின்னிய கூந்தலில் பூ வைத்தால்தான் பெண்ணுக்கு
அழகு. அதுபோல் உடலில் கால்சியம் சத்துடன் வைட்டமின்-டி சத்தும் தேவைக்கு
இருந்தால்தான் ஆரோக்கியத்துக்கு அழகு. காரணம், என்னதான் நாம் கால்சியம்
கலந்த உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த சத்தை உறிஞ்சி
உடலில் சேர்ப்பதற்கு வைட்டமின்-டியும் அவசியம்.
பிரச்சினை
என்னவென்றால், இது வழக்கமான உணவுகளில் அவ்வளவாக இல்லை; வெயிலில் மட்டுமே
கிடைக்கிறது. இந்தியா ஒரு வெப்ப நாடுதான். என்றாலும், இங்குதான் பத்தில்
ஏழு பேருக்கு வைட்டமின்- டி பற்றாக்குறை உள்ளது. என்ன காரணம்? லைஃப்
ஸ்டைல்! வெயிலே நுழைய முடியாத அடுக்குமாடி வீடுகளிலும் குளிரூட்டப்பட்ட
அலுவலகங்களிலும் முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த
வைட்டமின் கிடைப்பது குதிரைக்கொம்பாகி வருகிறது.
முன்பெல்லாம்
பகலில் வெளியில் செல்ல சைக்கிள், ரிக் ஷா, ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர
வாகனங்களைத்தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர். இப்போதோ வாடகைக் கார்
வசதிகள் எளிதாகக் கிடைப்பதால், நான்கு சக்கர வாகனங்களைப்
பயன்படுத்துவோர்தான் அதிகம். மேலும், குழந்தைகள் என்றில்லாமல்
வயதானவர்களும் மைதானங்களில் வெயிலில் விளையாடியது அந்தக் காலம். மாறாக,
அலைபேசியிலும் கணினியிலும் விளையாடி மகிழ்வது இந்தக் காலம். மாலை வேளைகளில்
கோவில், பூங்கா என்று குடும்பத்துடன் வெளியில் சென்றது அந்தக் காலம்.
பதிலாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குடும்பமே மூழ்கிப் போவது இந்தக்
காலம். இம்மாதிரியான நிலைமையில் இவர்கள் உடலில் வெயில் படுவதற்கான வாய்ப்பு
ரொம்பவும் குறைந்து போகிறது. இப்படிப் பல வழிகளில் வைட்டமின்-டிக்கு 144
தடை உத்தரவு. இதனால் எலும்புகள் பலவீனமாவதும் சுலபமாகிறது.
மூட்டுப் பிரச்சினை அறிவது எப்படி?
சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு
பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். அந்தப்
பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டுப்
பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். குடும்ப மருத்துவரிடம் இதைத்
தெரிவித்து, சில பரிசோதனைகள் மூலம் அதை உறுதி செய்யுங்கள். அடுத்தக்கட்ட
சிகிச்சைக்குத் தயாராகுங்கள்.
என்ன பரிசோதனை? என்ன சிகிச்சை? அடுத்த வாரம் வரை பொறுங்கள்.
14.10. 2018 காமதேனு இதழுக்குரியது.
வேண்டாமே!
· மூட்டுவலி உள்ளவர்கள் ஓட்டப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
· குதித்து விளையாடக்கூடாது.
· கயிறு தாண்டும் பயிற்சி ஆகாது.
· ஒரே மாதிரியான இயக்கம் மீண்டும் மீண்டும் வருகிற விளையாட்டு வேண்டாம். உதாரணம்: டென்னிஸ்.
· அதிக நேரம் மண்டிபோடக்கூடாது.
· புகை பிடிக்கக்கூடாது. புகையிலுள்ள நச்சு குருத்தெலும்பைச் சிதைக்கும். அது வளர்வதற்காகத் தரப்படும் மருந்துகள் வேலை செய்வதையும் தடுக்கும்.
முகவரி:
Dr. G. Ganesan, MBBS., Ganesh Hospital,
53/19-A, Angiah Raja Street, RAJAPALAYAM-626 117
VIRUDHUNAGAR – DT Mobile: 99524 34190
e-mail : gganesan95@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------------------------
Does knee pain includes both the leg knee and elbow also
ReplyDelete