அல்சரால் அவதியா?

 

Peptic Ulcer - Frequently Asked Questions / FAQ's
 


டாக்டர் கு. கணேசன், இராஜபாளையம்.


இன்றைய வாழ்க்கைச் சூழலில், 


‘அரிது அரிது
அந்நிய உணவுகளை
உண்ணாதோர் அரிது!
அரிது அரிது
இரைப்பை அல்சர்
இல்லாதோர் அரிது!’


எனக் குறுங்கவிதை எழுதும் அளவுக்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து   வருகின்றனர். வயதானவர்களுக்குத்தான் அல்சர் வரும் என்று சொல்லிவந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பத்து வயதிலேயே அல்சர் வந்துவிடுகிறது. 40 வயதில் இது ஆவேசம் காட்டுகிறது.


எது அல்சர்? 


இரைப்பையிலும் சிறுகுடலின் முன்பகுதியிலும் புண் ஏற்படுவதை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம். சிறுகுடலின் மற்ற பகுதிகளிலும் பெருங்குடலிலும்கூட அல்சர் வரலாம். அதற்கு வேறு பெயர்கள்; வேறு காரணங்கள்!
இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது; பெப்சின் என்சைம் உண்டாகிறது. இந்த இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் தற்காப்புச் சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர். 

shallow focus photo of hamburger


காரணங்கள் என்ன?


அல்சர் ஏற்பட பல காரணங்கள் உண்டு. என்றாலும், இரண்டே காரணங்கள்தான் அல்சருக்கு ஆணிவேர்கள். இரைப்பை அமிலம் அதிகமானாலும் அல்சர்! இரைப்பைச் சுவர் பலவீனம் ஆனாலும் அல்சர்! இந்த இரண்டுக்கும் அடிப்படை அம்சம் தற்போதைய தவறான வாழ்வியல் முறை!


அமிலச் சுரப்பு அதிகமாவதற்கு அந்நிய நாடுகளின் துரித உணவுகள்தான் முதல் காரணம். எப்படி? இரைப்பையில் அமிலம் சுரப்பதை வானொலியை டியூன் செய்வதற்கு ஒப்பிடலாம். சூரியன் எஃப்.எம். கேட்க வேண்டுமா? 93.5 அலைவரிசை. ஹலோ எஃப்.எம்.முக்கு 106.4. இதுமாதிரிதான், நாம் சாப்பிடுவது இட்லி/இடியாப்பமா? அதைச் செரிமானம் செய்ய கொஞ்சமாக அமிலம் சுரக்கும். செயற்கை ரசாயனங்கள் தூக்கலாக இருக்கிற மட்டன் பிரியாணியும் சுக்கா வருவலும் சாப்பிடுகிறோமா? அப்படியானால் அமிலத்தின் அளவு பலமடங்கு அதிகமாகும். ஆக்ரோஷமான கடல் அலைகள் அடிக்கடி வந்தால் கரை சேதமாவதுபோல் அளவுக்கு அதிகமான அமிலம் அடிக்கடி சுரந்தால் அது இரைப்பையைத் தாக்கும்; அல்சர் தலைகாட்டும்.

 
பெரும்பாலான வானொலிகள் சொல்லிவைத்ததுபோல் அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பை ஆரம்பித்து விடும். அதேபோல் இரைப்பையிலும் காலை, மதியம், இரவு வேளைகளில் முறையே 8, 1, 8 என்ற மணி அளவில் உணவை எதிர்பார்த்து அமிலம் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த நேரங்களில் நாம் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், இந்த அமிலம் இரைப்பைச் சுவர்களைத் தின்ன ஆரம்பிக்கும். நேரத்தோடு சாப்பிடாதவர்களுக்கு இந்த வழியில்தான் அல்சர் வருகிறது. 


சிலருக்குக் காரம், புளிப்பு சாப்பிட்டால் அமிலம் அதிகமாகும். இன்னும் சிலருக்கு எண்ணெய் காரணமாக இருக்கும். இன்றைக்குக் காரம், புளிப்பு, எண்ணெய் மிதக்காத ஒரு துரித உணவைக் கைகாட்ட முடியுமா? அதனால்தான் சொன்னேன், அந்நிய உணவுகள் அல்சருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் தீயசக்திகள் என்று!


அடுத்து, மனசுக்கும் அல்சருக்கும் நெருங்கிய தொடர்புண்டு! ஆம்! மனசுக்கும் அமிலச் சுரப்பிகளுக்கும் நடுவில் வேகஸ் எனும் நரம்புப் பாலம் உண்டு. இதன் வழியாகத்தான் மூளையிலிருந்து அமிலம் சுரப்பதைத் தூண்டுகிற ‘தூதுவர்கள்’ இரைப்பைக்கு வந்து சேருகின்றனர். ஆகவேதான், மன அழுத்தம், கவலை, கோபம், ஆத்திரம், பரபரப்பு போன்ற மனசு சார்ந்த பிரச்சினைகள் நம்மை பாதிக்கும்போதெல்லாம் இரைப்பையில் அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்து அல்சரை வரவேற்கிறது. இதுபோல் உறக்கம் தொலைந்த/ஓய்வில்லாத வாழ்க்கையும் அல்சருக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
இரைப்பைக்குப் புகையும் மதுவும் ஓர் இரட்டைத் துப்பாக்கி போன்றது! இவை அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும்; ஏற்கனவே அல்சர் இருந்தால் அதைத் தீவிரப்படுத்தும்; அல்சர் மாத்திரைகளையும் வேலை செய்யவிடாது; நோய் குணமாகாது.


கோபிநாத் ஒரு நிதி நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் தினமும் 2 பெட்டி சிகரெட் புகைப்பார்; வார இறுதியில் மதுவும் உண்டு. அதேவேளை அவருக்கு அல்சரும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன. இந்த இரண்டுக்கும் மாத்திரைகளை மாற்றி மாற்றிச் சாப்பிட்டு வந்தார். எதுவும் பலன் தரவில்லை. ஒரு கட்டத்தில் “நீங்கள் புகை, மது இரண்டையும் நிறுத்தினால் மட்டுமே உங்கள் இரட்டைப் பிரச்சினைகள் தீரும்” என்று கடுமையாகச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் அந்தப் பழக்கங்களைத் துப்புரவாக நிறுத்தி விட்டார். அப்புறம் அவருக்கு அல்சரும் இல்லை; அதிக பிரஷரும் இல்லை. இது அல்சர் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிச்சுவடிப் பாடம். 


இரைப்பைச் சுவர் பலவீனம் ஆனாலும் அல்சர் வரும் என்று சொன்னேன். இதற்கு ஒரு முக்கியக் காரணம், ‘ஹெச்.பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா கிருமி. இது அசுத்தமான தண்ணீரில் வசிக்கிறது. அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கும் அதில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கும் இது சுலபத்தில் தொற்றிக்கொள்கிறது. உதாரணமாக, இன்றைக்கு சாலையோரக் கடைகளில் எந்த அளவுக்குத் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இது தெரிந்தே இருந்தாலும், அங்கு சாப்பிடுவோர் கொஞ்சநஞ்சமல்ல! அதுபோல் நாட்டில் பல ஊர்களில் குடிநீருக்குப் பாதுகாப்பு இல்லை. இப்படி உள்ளே நுழையும் பைலோரி கிருமி இரைப்பைச் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும். இரைப்பையில் அமிலம் சுரக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அது இரைப்பைச் சுவரில் துளைபோட்டு ஒளிந்துகொள்ளும். இரைப்பைச் சுவர்கள் பலவீனமாவதற்கு இந்த ஊடுருவல்தான் பிரதானக் காரணம்.


இதையும் சொல்லிவிடுகிறேன். இந்தக் கிருமியால் அல்சர் வந்தவர்கள் வழக்கமான ஆன்டாசிட் மாத்திரைகளை கிலோ கணக்கில் சாப்பிட்டாலும் அல்சர் குணமாகாது. இதற்கென இருக்கிற கூட்டு மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் அல்சர் விடைபெறும். 


எந்த ஒரு நோய்க்கும் மருந்துக் கடைகளில் தாங்களாகவே மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது ஒருபுறம் இருக்க, இன்றைய தலைமுறைக்கு அமேசான் அறிமுகம் ஆன பிறகு ஆன்லைனில் மாத்திரை/மருந்து வாங்கிச் சாப்பிடுவதும் அதிகரித்து விட்டது. இப்படியான சுயமருத்துவத்தில் முதலில் பாதிக்கப்படுவது இரைப்பைதான். அதிலும் குறிப்பாக, ஸ்டீராய்டு மாத்திரைகள்; ஆஸ்பிரின், இபுபுரூஃபன், டைக்ளோஃபெனாக், அசிக்ளோஃபெனாக் போன்ற வலிநிவாரணிகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது இரைப்பை சவ்வைச் சிதைத்து அல்சருக்கு வழிவிடும். 


அறிகுறிகள் என்ன?


அல்சர் இருப்பதற்கான முதல் அடையாளம், வயிற்றுவலி! பசிக்கும்போது/சாப்பிட்டதும்/நடு ராத்திரியில் வயிற்றில் ‘வலிக் கச்சேரி’ ஆரம்பிக்கிறது என்றால் அல்சர் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். வலியோடு நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாந்தி, பசிக்குறைவு போன்ற பக்கவாத்தியங்களும் சேர்ந்துகொள்ளும். இரைப்பை அல்சர் இருந்தால் உணவு சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமாகும். சிறுகுடலில் அல்சர் என்றால் சாப்பிட்டதும் வலி குறையும். 


நோய் அறிவது எப்படி?


வாய்வழியாக உணவுப்பாதையில் 'எண்டோஸ்கோப்பி’ (Gastro endoscopy) கருவியைச் செலுத்திப் பார்த்தால் இரைப்பையில் அல்சர் எங்கே, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது தெரிந்துபோகும். இது மட்டுமல்ல, அல்சரைக் கொஞ்சமாகக் கிள்ளியெடுத்து, திசு ஆய்வு செய்து, அது அல்சர்தானா, புற்றுநோயா, ஹெச்.பைலோரி இருக்கிறதா என்பதையும் இதில் தெரிந்துகொள்ள முடியும். ரத்தத்தில் இந்தக் கிருமிக்கு எதிரணுவும் (Antibody), மலத்தில் இதன் புரதக்கூறும் (Antigen) உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு இந்தப் பாதிப்பை உறுதி செய்யலாம். இன்றைய தலைமுறைக்கு இந்தப் பரிசோதனைகள் மிகவும் அவசியம். ஏனெனில், இந்தக் கிருமியினால் அல்சர் வருவதே இப்போது அதிகம். 


பத்துப் பக்குவங்கள்!


‘விரல்கள் பத்தும் மூலதனம்’ என்கிறார் கவிஞர் தாராபாரதி. அதேபோல் அல்சர் உள்ளவர்களுக்குக் கீழ்க்காணும் பத்துப் பக்குவங்கள் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்; அவரவர் தேவையைப் பொறுத்துப் பக்குவங்களைப் பகிர்வார்கள். 1. இரைப்பை அமிலத்தைச் சமப்படுத்தும் மருந்துகள். 2. அமிலம் அதிகமாகச் சுரப்பதைத் தடை செய்யும் மருந்துகள். 3. அல்சரின்மேல் அமிலம் படுவதைத் தடுக்கும் மருந்துகள். 4. ஹெச். பைலோரிக்குத் தரப்படும் கூட்டுமருந்து. 5. வயிற்றுவலியைக் குறைக்கும் மருந்துகள். 6. வாந்தியை நிறுத்தும் மருந்துகள். 7. மனசுக்கு நிம்மதி தரும் மருந்துகள். 8. சரியான உணவுப் பழக்கம். 9. தேவையான ஓய்வும் உறக்கமும். 10. புகை, புகையிலை, மதுவுக்குத் தடை உத்தரவு. 


இந்தப் பக்குவங்கள் கைகோத்து 6 வாரத்துக்குள் அல்சரைக் குணப்படுத்திவிடும் என்பது உண்மைதான். ஆனாலும் அல்சர் மறுபடியும் வராது என்று மட்டும் உறுதி தரமுடியாது. காரணம், இன்றைய உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அப்படி! 


 25.11. 2018 காமமேனு இதழுக்குரியது.

பெட்டிச் செய்தி:


அல்சர் வராமல் தடுப்பது எப்படி?


·    ஒரு வேளை உணவைக்கூடத் தவிர்க்காதீர்கள்; தள்ளிப்போடாதீர்கள்.
·    காரம், மசாலா, புளிப்பு நிறைந்த உணவுகளைத் தவிருங்கள்.
·    சிறுதானிய உணவுகள், முழுதானிய உணவுகள் சிறந்தவை.
·    கத்திரிக்காய், அவரை உள்ளிட்ட நாட்டுக் காய்கள் நல்லது.
·    அவித்த உணவை அதிகமாகவும் பொரித்த உணவைக் குறைவாகவும் சாப்பிடுங்கள்.
·    நீர் மோரும் இனிப்புத் தயிரும் (Yogurt) இரைப்பைக்கு நண்பர்கள்.
·    நொறுக்குத் தீனிக்குப் பதிலாக பழம், சாலட் சாப்பிடுங்கள்.
·    காபி, தேநீர், குளிர் பானங்கள், கோலா பானங்கள் வேண்டாமே!
·    இரவில் எளிய உணவு போதும்.
·    அடிக்கடி விருந்துகளுக்குச் செல்லாதீர்கள்.
·    மது, புகை வேண்டவே வேண்டாம்!
·    பயம், பதற்றம், பரபரப்பு, ஆத்திரம், கோபம், மன அழுத்தம் தவிர்க்கவும்.
·    சுயமருத்துவம் வேண்டாம்.
·    வலி மாத்திரைகளிடம் கவனமாக இருங்கள்! 


முகவரி:
Dr. G. Ganesan, MBBS.,          Ganesh Hospital,
53/19-A, Angiah Raja Street,         RAJAPALAYAM-626 117
VIRUDHUNAGAR – DT                    Mobile: 99524 34190       
e-mail: gganesan95@gmail.com











Comments

  1. இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்சைம் ஆகிய இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் தற்காப்புச் சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர் என்ற சிறு விளக்கத்துடன், அதற்கான முக்கிய காரணம்செயற்கை ரசாயனங்கள் உள்ளடக்கிய துரித உணவு களும், மதுவும் புகையும் என்பதை விளக்கி,
    நேரத்தோடு சாப்பிடாதவர்களுக்கு இந்த வழியில்தான் அல்சர் வருகிறது என்பதை கட்டுரை விளக்கி உள்ளது.
    மேலும் மன அழுத்தம், கவலை, கோபம், ஆத்திரம், பரபரப்பு போன்ற மனசு சார்ந்த பிரச்சினை களும் அல்சர் உண்டாவதற்கு வித்திடுகின்றன என்றும், அசுத்தமான தண்ணீரிலுள்ள
    ஹெச்.
    பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா கிருமி வயிற்றுப்
    புண்ணை உண்டாக்குகிறது என்பதையும்
    தவிர மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்ளும்
    ஸ்டீராய்டு மாத்திரைகள்; ஆஸ்பிரின், இபுபுரூஃபன், டைக்ளோஃபெனாக், அசிக்ளோஃபெனாக் போன்ற வலிநிவாரணிகளை அடிக்கடி சாப்பிடுவது இரைப்பை சவ்வைச் சிதைத்து அல்சருக்கு வழி வகுத்துவிடும் என்று எச்சரிக்கை அனைவரும் கவனத்தில் கொள்ளத் தக்கது.
    இக்கட்டுரையின் விழிப்புணர்வின் மூலம் நாம் வயிற்றுப்புண் ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்ள இயலும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
    S. K. Subramanian

    ReplyDelete
  2. இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்சைம் ஆகிய இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் தற்காப்புச் சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர் என்ற சிறு விளக்கத்துடன், அதற்கான முக்கிய காரணம்செயற்கை ரசாயனங்கள் உள்ளடக்கிய துரித உணவு களும், மதுவும் புகையும் என்பதை விளக்கி,
    நேரத்தோடு சாப்பிடாதவர்களுக்கு இந்த வழியில்தான் அல்சர் வருகிறது என்பதை கட்டுரை விளக்கி உள்ளது.
    மேலும் மன அழுத்தம், கவலை, கோபம், ஆத்திரம், பரபரப்பு போன்ற மனசு சார்ந்த பிரச்சினை களும் அல்சர் உண்டாவதற்கு வித்திடுகின்றன என்றும், அசுத்தமான தண்ணீரிலுள்ள
    ஹெச்.
    பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா கிருமி வயிற்றுப்
    புண்ணை உண்டாக்குகிறது என்பதையும்
    தவிர மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்ளும்
    ஸ்டீராய்டு மாத்திரைகள்; ஆஸ்பிரின், இபுபுரூஃபன், டைக்ளோஃபெனாக், அசிக்ளோஃபெனாக் போன்ற வலிநிவாரணிகளை அடிக்கடி சாப்பிடுவது இரைப்பை சவ்வைச் சிதைத்து அல்சருக்கு வழி வகுத்துவிடும் என்று எச்சரிக்கை அனைவரும் கவனத்தில் கொள்ளத் தக்கது.
    இக்கட்டுரையின் விழிப்புணர்வின் மூலம் நாம் வயிற்றுப்புண் ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்ள இயலும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
    S. K. Subramanian

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைனஸ் தலைவலி இனி இல்லை!

மூட்டுவலிக்கு முகாந்திரம்!

முதுகு வலிக்குத் தீர்வு எது?